குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை அவசர கூடுதல் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் முத்ரா கடனாளிகளுக்கு அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடன் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
சம்பளம் போடக்கூட கைல காசு இல்ல.. மோடிஜி உடனே நிதி கொடுங்க.. நாராயணசாமி வலியுறுத்தல்
ரூ3 லட்சம் கோடி வரை கடன்
தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பம் உள்ள முத்ரா கடனாளிகளுக்கு அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம்'' மூலம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடன் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பம் உள்ள முத்ரா கடனாளிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடனுக்கு தேசிய கடன் உத்தரவாத டிரஸ்டி கம்பெனி லிமிடெட் (NCGTC), உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடனளிப்பு (GECL) ஏற்பாட்டின் மூலம், 100 சதவீத உத்தரவாதம் அளிக்கும். இதற்காக நடப்பு மற்றும் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மத்திய அரசு ரூ.41,600 கோடி தொகுப்பு நிதி அளிக்கும்.
ஏன் இந்த திட்டம் அறிமுகம்?
கொரோனா தாக்குதல் மற்றும் லாக்டவுன் அமல் காரணமாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) உருவாக்கப்பட்டது. உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடன் அளிப்பதன் மூலமும், ரூ.3 லட்சம் கோடி கூடுதல் கடன் அளிப்பதன் மூலமும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிச் சேவையில் இல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற கடனளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் தருவதை நோக்கமாகக் கொண்டதாக இத் திட்டம் இருக்கும். கொரோனா பிரச்சினையால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, GECL கடனை கடனாளிகள் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதால் ஏற்படும் எந்த இழப்புக்கும் 100 சதவீத உத்தரவாதம் அளிப்பதாக இது இருக்கும்.
இடம்பெயர்ந்தோருக்கு இலவச தானியம்
கொரோனா லாக்டவுனால் சுமார் 8 கோடி இடம் பெயர்ந்தோருக்கு, இரு மாதங்களுக்கு இலவசமாக மாதத்துக்கு தலா 5 கிலோ உணவு தானியங்களை மத்தியத் தொகுப்பில் இருந்து வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு உணவு மானியமாகத் தோராயமாக ரூ 2,982.27 கோடி தேவைப்படும். மேலும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து செலவு, கையாளும் செலவு, விற்பனையாளர் லாபம்/ கூடுதல் விற்பனையாளர் லாபம் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் ரூ 127.25 கோடியையும் மத்திய அரசே முழுவதும் ஏற்றுக் கொள்ளும். எனவே, இந்திய அரசின் மொத்த மானியம் ரூ 3,109.52 கோடி என மதிப்பிடப்படுகிறது.
வயது முதிர்வு கால வருமான உறுதி
மேலும் மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் நலத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கு மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டமாக ரூ.10,000 கோடி திட்ட மதிப்பீட்டில், ``உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு'' ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான செலவுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.