மத்திய அரசு பணிக்கு தேர்வு நடத்த தேசிய பணியாளர் ஏஜென்சி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான தேசிய பணியாளர் ஏஜென்சியை National Recruitment Agency- உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விவரித்தார்.
இது தொடர்பாக ஜவடேகர் கூறுகையில், மத்திய அரசு பணிகளில் பி,சி பிரிவில் வேலைவாய்ப்பு, பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு தேசிய அளவில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளை நடத்த தேசிய பணியாளர் ஏஜென்சி National Recruitment Agency அமைக்கப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
கரும்புக்கு கூடுதல் விலை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அத்துடன் ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விடும் பரிந்துரைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த மே மாதமே அனைத்து விமான நிலையங்களையும் 3 மாதங்களுக்குள் தனியார் மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்த 3 மாத கால அவகாசம் என்பது ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது.
இந்த நிலையில் இணைய கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
Recommended Video
2030-ம் ஆண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்றார். ஏற்கனவே நாட்டின் 12 விமான நிலையங்களை மத்திய அரசு தனியார்மயமாக்கி இருக்கிறது.