'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்
டெல்லி: இன்று நடந்த டிராக்டர் பேரணியில் விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டிக்கிறோம், அதற்காக வருந்துகிறோம் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் பல கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளின் ஒரு பிரிவினர் என்று கூறப்படும் நபர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர்.
அவர்கள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை இடித்து தள்ளி உள்ளே நுழைந்தனர். இதனால், போலீசார் தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். அதேபோல, காசிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
மேலும், தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி தடையை மீறி உள்ளே நுழைந்தவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் தடுப்புகளை கடந்து டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். குறிப்பாக, விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.
இதனிடையே, டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பான சூழல் உருவானது. விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து அந்த நபர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து, செங்கோட்டைக்குள் நுழைந்த அனைத்து விவசாயிகளும் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாய சங்கமான Kisan Sangharsh Mazdoor Sangharsh committee சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விவசாயிகள் உடனடியாக சிங்கு எல்லைக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் சிங்கு எல்லைக்கு அணிவகுத்துக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இன்றைய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றி கூறுகிறோம். அதேசமயம், இன்று நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளையும் நாங்கள் கண்டிக்கிறோம், அதற்காக வருந்துகிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து நாம் தனித்திருக்க வேண்டும் என்றும் விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.