சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா?
டெல்லி : சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு 0.3 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை, மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.
அந்தவகையில், நடப்பு நிதி ஆண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.
அதன்படி, 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Cipet Recruitment 2021 : சென்னையில் மத்தியஅரசு நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு
வட்டி விகிதம் மாற்றம்
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து ரிசர்வ் வங்கி 3 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் 3 தவணைகளாக மொத்தமாக 1.4 சதவிகிதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதமும், நிலையான வைப்பு போன்ற முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு உயர்ந்தது.
மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சமீப காலமாக சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், 2022-23ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் எவ்வளவு உயர்வு?
ஒரு வருட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. 2 வருட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகவும், 3 வருட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்சமாக 0.3 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சீனியர் சிட்டிசன்ஸ்
மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்திர வருவாய் கணக்கு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 123 மாதங்களில் முதிர்ச்சி பெறும் கிஷான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டி வகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 7.0 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களில் மாற்றமில்லை
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் சுகன்யா சம்ரித்தி திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் முறையே 7.1% மற்றும் 7.6% ஆக மாற்றமின்று உள்ளன. அதேபோல், ஓராண்டு, ஐந்தாண்டு, கால வைப்புக்கான வட்டி விகிதம் 5.5% த்தில் இருந்து மாற்றமில்லை, ஓராண்டு, ஐந்தாண்டு தொடர் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் முறையே 6.7% லிருந்து மாற்றம் செய்யப்படவில்லை.