நீண்ட இழுபறிக்கு பிறகு.. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. அரசிதழில் வெளியானது அறிவிப்பு!
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய சுகாதாரத்ததுறை சார்பில் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எய்ம்ஸ் (All India Institutes of Medical Sciences) மருத்துவமனை தேவை என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சிறப்பு மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ வசதிகள், எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சம் என்பதால், நோயாளிகளுக்கு இது ஒரே இடத்தில் அனைத்திற்குமான தீர்வாக அமையக் கூடிய மருத்துவமனையாகும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிகிச்சை தரம், உலக அளவில் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில்தான், கடந்த 2015ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் எங்கு அமையும் என்பது அறிவிக்கப்படவில்லை.
காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை என 5 மாவட்டங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம் பார்க்கப்பட்டது. அதனையடுத்து, இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
"சீக்ரெட்".. திமுகவை லெப்ட் அண்ட் ரைட் பிடித்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் வந்து சேர்ந்த மா.செ. பதவி
மத்திய அமைச்சரவை
இதையடுத்து மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் 1,500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர், 2018 டிசம்பர் மாதம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை சார்பில் ஒப்புதல் தரப்பட்டது. தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
மோடி அடிக்கல்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்குவதற்கான விழா கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. ஆனால் மருத்துவமனை துவங்குவது குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருந்தது.
கிடப்பில் பணி
ஒரு கட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் அறிவிப்பு அளவிலேயே நிறுத்தப்படுமோ என்ற ஐயம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்குமே வந்துவிட்டது. அந்த அளவுக்கு கிணற்றில் போட்ட கல் போல எந்த தகவலும் வெளியாகாமல், அப்படியே கிடந்தது எய்ம்ஸ் பணிகள். இதில் கொரோனா பிரச்சினை வேறு சேர்ந்து கொண்டதால், மக்கள் அதை மறந்தேவிட்டார்கள்.
அரசிதழ்
இந்த நிலையில்தான், முதற்கட்டமாக 224.24 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதைச்சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீட்டை, கடன் தரும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையான, ஜிக்கா தயாரிக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியான அரசிதழில், எய்ம்ஸ் மருத்துவமனை சட்ட பிரிவு 3ன் கீழ் தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் நிறுவனம் நிறுவப்படுகிறது என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
இது மகிழ்ச்சியளிக்கும் முடிவு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு வாய்ந்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார் மதுரை எய்ம்ஸ் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன். ஜிக்கா நிதி நிறுவனம் கடன் தொகையை விடுவித்ததில் இருந்து 45 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.