டெல்லி வன்முறைகளை தடுக்க திராணியில்லையா? வேட்டையாடுங்கள் என வேடிக்கை பார்க்கிறதா மத்திய பாஜக அரசு?
டெல்லி: டெல்லியின் வடகிழக்கு பகுதி தலைநகரில் இருந்து துண்டிக்கப்பட்ட வனாந்திரம் போல வெறிகொண்ட கும்பலின் வேட்டைக்காடாகிப் போனது.. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசார் இப்போது நீதிமன்றங்களில் கூனிக் குறுகி நின்று கொண்டிருக்கிறார்கள்... வெறியாட்டம் போட்ட சமூகவிரோதிகளை கட்டுப்படுத்தாமல் கைகட்டி காவல்துறையை நிற்க வைத்தது யார்? என்கிற கேள்விகள் எதற்கும் பதிலேதும் தராமல் மத்திய பாஜக அரசால் கடந்து போய்விட முடியாது.
Recommended Video
டெல்லியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை சிதைக்கும் வன்முறை கும்பல்- ரத்த வெள்ளத்தில் மரணித்துக் கொண்டிருக்கும் இளைஞர்.. பற்றி எரியும் கடைவீதிகள்.. இவைகள்தான் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும் டெல்லி வீடியோக்கள். இத்தகைய வீடியோக்களை நம்ப வேண்டாம்; பரப்ப வேண்டாம் என பம்மாத்து வேலை காட்டுகிறது மத்திய பாஜக அரசு.
ஆனால் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட இந்த கர்ண கொடூரங்களின் நிகழ் சாட்சிகளாக அடிபட்டு மிதிபட்டு பல் உடைபட்ட பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள்.. வீதிகளில் மைக்கை பிடித்து நின்று செய்தி சொன்னவர்கள்.. கார்களில் பதுங்கிக் கொண்டு பதறியபடி நிகழ்வுகளை செய்திகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் சர்வ வல்லமை படைத்த பாஜக ஆட்சி பரிபாலனம் நடத்துகிற டெல்லியில் பாதுகாப்பு நிலைமை.
டெல்லி கலவரம்.. விசாரணை நடத்தப்போகிறோம்.. கமிஷனர் இங்கு இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி
துணிச்சல் இல்லையா?
அரசியல் சாணக்கியரான அமித்ஷா ஜியின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீசாரின் கண்ணெதிரேதான் இத்தனை வன்முறைகளும்.. தம்மை நோக்கி துப்பாக்கியால் நீட்டுகிற சமூக விரோதியை மடக்கிப் பிடித்து சுட்டுத் தள்ளுகிற துணிச்சலை அடகுவைத்துவிட்டு அடிமாடுகளைப் போல வேடிக்கை பார்க்கிறது டெல்லி போலீஸ்.. தாக்குதல் நடத்தியதும் துப்பாக்கி தூக்கியதும் தீப்பந்தம் எடுத்ததும் இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வீதிக்கு வந்த இந்துத்துவா கும்பல்தான் என்பதை அறிந்தும் கைகட்டி டெல்லி போலீஸ் வேடிக்கை பார்த்தது எதனால்? தங்களை ஆளும் எஜமானர்களின் கட்சி என்பதால் எதையும் செய்யக் கூடாது என அவர்களாகவே தீர்மானித்தார்களா?
யமுனையில் ரத்த ஆறுதான்..
பாஜக இன்றளவும் டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர் படுகொலையை பற்றி பேசுகிறதே.. இன்றும் நிலைமையை அப்படியே விட்டுவிட்டால் டெல்லி யமுனை நதியில் ரத்த ஆறுதான் ஓடிக் கொண்டிருக்கும். அன்று காங்கிரஸ் தலைவர்கள் முன்னின்று சீக்கியர்களை படுகொலை செய்ததாக கூப்பாடு போடுகிற பாஜக இன்று கபில் மிஸ்ராக்களின் பேச்சுகளுக்கு பர்வேஷ் வர்மாக்களின் மிரட்டல்களுக்கும் என்ன பதிலை வைத்திருக்கிறது? இந்திய அரசியல் வரலாற்றில் இத்தனை வன்மத்தையும் விஷமத்தையும் கக்குகிற வெளிப்படையாக வன்முறையை தூண்டுகிற- ஆயுதங்களைக் கையேந்தி காவல்துறையையே மிரட்டுகிற கோட்டான்கள் கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறோம்.
நிகழ்கால சாட்சியங்கள்
1984 சீக்கியர் படுகொலையை, 2002 குஜராத் இனப்படுகொலையை கண்டிராத இளம் சமூகத்தினருக்கு இப்படித்தான் நரவேட்டையாடினார்கள் அன்று என படம் பிடித்துக் காட்டுகிற பாக்கியம்பெற்றவர்களாகி இருக்கிறது இந்துத்துவா கும்பல். டெல்லியில் மாண்டோர் எண்ணிக்கை மளமளவென உயருகிறது. 3-ல் தொடங்கி 48 மணிநேரத்தில் 20ஐ தொட்டிருக்கிறது இந்த பச்சைபடுகொலை எண்ணிக்கை. படுகாயமடைந்த 200க்கும் அதிகமானோரில் அவசரசிகிச்சைக்குக் கூட நட்ட நடுசியில் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய நாதியற்ற நிலைமையில் இருக்கின்றனர் இந்த தேசத்து மக்கள்.
போலீசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
இதனால்தான் உச்சநீதிமன்றமே இன்று கடுமையான கண்டங்களை கொட்டி குவித்திருக்கிறது. டெல்லி போலீசார் நினைத்திருந்தால் இத்தகைய வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமலா போயிருக்கும்? தேசமே அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது.. தேசத்தின் உச்சநீதிமன்றமே சரமாரியாக வெளுத்து வாங்குகிறது.. இன்னமும் இந்த தேசத்தின் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்திறந்து அமைதி காக்க ஒரு அழைப்பு விடுத்தார்களா?
தூக்கி எறிய வேண்டாமா?
அவர்கள் எப்படி அழைப்பார்கள்? ஜனாதிபதி மாளிகையின் உப்பரிகையில் அமெரிக்க அதிபரின் விருந்து உபசாரத்தில் அல்லவா அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்? மனசாட்சி கொஞ்சமேனும் இருந்திருந்தால் இத்தகைய பெரும் துயரங்களுக்கு பொறுப்பேற்று இந்த நேரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியைவிட்டு விலகி இருக்க வேண்டாமா? சட்டாம்பிள்ளைத்தனமும் சாணக்கியத்தனமும் தேசத்தின் குடிமக்களைப் பாதுகாக்கத்தான்.. அதை செய்ய திராணியில்லை எனில் அந்த பதவியில் நீடிப்பது ஏன்? தூக்கி எறிய வேண்டாமா?
மக்களின் பாடம் காத்திருக்கிறது
நீங்கள் தூக்கி எறியாமல் துயரப்படாமல் பம்மிக் கொண்டிருப்பதன் மூலம் இந்த தேசம் ஒன்றை தெளிவாக உணர்ந்திருக்கிறது.. தூண்டிவிட்ட பாஜகவினரிடம் எப்படி இதையெல்லாம் எதிர்பார்க்கத்தான் முடியும்? இந்த நேரம் வரை டெல்லியில் 2 மாதங்களாக வெறிப்பேச்சு பேசிய எவரையேனும் கைது செய்திருக்கிறார்களா? தேசம் கொந்தளிப்புடன் பார்த்து கொண்டே இருக்கிறது.. எல்லா காலமும் பார்த்துக் கொண்டேவும் இருக்காது.. நிச்சயம் பாடம் காத்திருக்கிறது!