நாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை!
டெல்லி: தேசத்தையே அதிரவைத்து கொண்டிருக்கின்றனர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டிருக்கும் விவசாயிகள். இதனையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
மத்திய பாஜக அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை. இதற்காக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து டிராக்டர்களிலும் நடைபயணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
தடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்
கடும் குளிரிலும் போராட்டம்
டெல்லியில் புராரி மைதானத்திலும் டெல்லி எல்லையிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள், பிஞ்சு குழந்தைகள் என ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களுமே வீதிகளில் முகாமிட்டு போராட்டம் நடத்துகின்றன.
அமித்ஷா கருத்து
இந்த போராட்டத்தின் பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கூறியது மிகப் பெரிய சர்ச்சையானது. ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் என கூறினார்.
அமித்ஷா பேச்சுவார்த்தை
அத்துடன் இன்று விவசாய சங்க பிரதிநிதிகளை தொலைபேசியில் அழைத்தும் பேசினாராம் அமித்ஷா. இது தொடர்பாக பாரதிய கிஷான் மஞ்ச் தலைவர் பூட்டா சிங் கூறியதாவது: விவசாய சங்க பிரதிநிதிகள் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசினர். எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா ஒப்புக் கொண்டார்.
அதிகாரிகளுடன் நாளை பேச்சு
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளுடன் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவர் என்றார். இதனிடையே வாரணாசியில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்த விவசாய உட்கட்டமைப்புகளுக்கான ரூ1 லட்சம் கோடி திட்டத்தை சுட்டிக்காட்டினார்.