எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... தொழிலாளர் சட்ட திருத்த மசோதா... லோக் சபாவில் தாக்கல்!!
டெல்லி: ஏற்கனவே சர்ச்சைகுள்ளாகி இருக்கும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை லோக் சபாவில் இன்று மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தாக்கல் செய்ய இருக்கிறார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மூன்று வேளாண் மசோதாக்கள் பெரிய அளவில் ராஜ்ய சபா மற்றும் லோக் சபாவில் எதிர்ப்பை கிளப்பி இருந்தது. எதிர்ப்பையும் மீறி ராஜ்ய சபாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேளாண் மசோதா நிறைவேறியது.
இந்த மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றம் செய்யும்போது துணைத்தலைவர் ஹர்வன்ஷ் சிங் இருந்தார். இவரது இருக்கைக்கு அருகே சென்று திரிணமூல், காங்கிரஸ், திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து எறிந்தனர். இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 எம்பிக்களை இந்தத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் லோக் சபாவில் இருந்து இன்று மாலை வெளிநடப்பு செய்துள்ளனர். காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே ஆகியோரிடம் சபாநாயகர் ஓம்பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் லோக் சபாவில் மூன்று தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தாக்கல் செய்கிறார். பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் மசோதா 2020, தொழில்துறை உறவுகள் மசோதா 2020, சமூக பாதுகாப்பு மசோதா 2020 ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார்.
இந்த மசோதாக்களின்படி, 300க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியைப் பெறாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேலையை விட்டு நீக்கவும் செய்யலாம். தற்போது இது 100க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி
- நிறுவனங்களில் தொழிலாளர்கள் சங்கங்களின் தலையீட்டை குறைக்கும்.
- இந்த மசோதாக்கள் மாநில அரசுகளுக்கு பணிநீக்கம் மற்றும் அவர்களின் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பான விதிகள் குறித்து அதிகாரங்களை வழங்கும்.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும்
- தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கும், தொழிலாளர் சீர்திருத்தங்கள் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குகிறது.