கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமித் ஷா.. வீட்டு தனிமையில் இருக்கப்போவதாக தகவல்
டெல்லி: கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு தனிமையில் அவர் இருக்க உள்ளார்.
55 வயதாகும் அமித்ஷாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பலனளிக்க தொடங்கியதன் காரணமாக மறுபடியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இதுதொடர்பாக அமித்ஷா இந்தியில் ட்வீட் செய்துள்ளார். இன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலம் பெற வேண்டும் என்று விரும்பி வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி. இன்னும் சில நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்த உள்ளேன்.
மலப்புரம் கலெக்டருக்கு கொரோனா.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்
மருத்துவர்கள் என்னை சில நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். மருத்துவமனை ஊழியர்களுக்கும், டாக்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கு அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் சிலர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பிறகு குணமடைந்து நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.