மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பிறகு, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவை தொடர்ந்து தர்மேந்திர பிரதானும் ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. இதையடுத்து தர்மேந்திர பிரதான், அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேத்தா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஜூலை 29 மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் பங்கேற்கவிலலை என்று குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர்மட்ட அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
51 வயதான தர்மேந்திர பிரதான், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது மத்திய அமைச்சர் ஆவார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்!
ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரபிரதேச தொழில்நுட்ப கல்வி அமைச்சர் 62 வயதான கமல் ராணி வருண் கொரோனாவால் உயிரிழந்தார். லக்னோவில் உள்ள அரசு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.
கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த மற்ற அரசியல் தலைவர்கள் என்ற வரிசையில் பார்த்தால் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தமிழ்நாட்டின் மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் பஞ்சாப் ஊரக வளர்ச்சி அமைச்சர் டிரிப்ட் சிங் பஜ்வா மற்றும் மகாராஷ்டிரா அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.