டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையை அரசியலாக்குவதாக காங்கிரஸைத் தாக்கிய , மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம், பிரபல ஆங்கில ஊடகம், பாஜக எம்பி கபில் மிஸ்ராவின் வெறுப்பு நிறைந்த இனவாத பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கிளம்பி சென்றுவிட்டார்.
ஆத்திரமூட்டும் வெறுப்புகள் நிறைந்த பேச்சுக்களை பேசியதாக பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அனுராக் தாகூர் மற்றும் அபய் வர்மா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை கடுமையாக கண்டித்தது.
அப்போது பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களின் வீடியாக்களை பார்க்கவில்லை என்று டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதையடுத்து டெல்லி காவல்துறை துணை போலீஸ் கமிஷனர், பல வழக்கறிஞர்கள் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம் இந்த வீடியோக்களை பாருங்கள் என்று நான்கு வீடியோக்களை நீதிமன்ற அறையில் திரையிட உத்தரவிட்டது.
டெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்!
நீதிமன்றம்
இந்நிலையில் இன்றும் பிரெஸ் மீட்டில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகரிடம், பாஜக எம்பி கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு குறித்து பிரபல ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதை பற்றி என்னிடம் இப்போது கேட்காதீர்கள் என்றார்.
சரமாரி கேள்வி
அந்த வீடியோவைப் பார்க்கவில்லை என்று டெல்லி போலீசார் கூறியதையடுத்து, அதைப் பற்றி நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் (அமுல்யா பட்நாயக்) நீதிமன்றத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாரே என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அந்த ஆங்கில ஊடகம் மீண்டும் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், கொடுக்க வேண்டிய பதிலை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன், நன்றி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
காங்.மீது தாக்கு
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்து உள்ளது. இதை குறிப்பிட்டு அமித்ஷாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜினாமா செய்ய வலியுறுத்தினார் இதற்கு பிரகாஷ் ஜவடேகர் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையை அரசியலாக்குவதாக காங்கிரஸைத் தாக்கினார்.
திட்டமிட்ட ஒன்று
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் டெல்லியில் நடந்த வன்முறையானது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்,. வன்முறை தொடர்பாக உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? துணை ராணுவத்தை முன்கூட்டியே அழைக்காதது ஏன்? இந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.