ஒரு மாதத்திற்கு பிறகு.. காலையிலேயே மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆபீஸ் வருகை.. கலகலக்கும் டெல்லி
டெல்லி: சுமார் ஒரு மாதம் கழித்து மத்திய அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். அரசு கார் வசதிகள் கொண்ட அதிகாரிகளும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். சுமார் ஒரு மாத காலமாக இவ்வாறு நிலைமை தொடர்ந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள அமைச்சர்கள் அவரவர் அலுவலகம் வந்துள்ளனர்.
மீண்டும் வந்தால் கஷ்டம்.. வுஹன் திறந்து ஒரே வாரம்.. சீனாவில் கொரோனா 'செகண்ட் வேவ்'.. என்ன நடக்கிறது?
குறைந்த அளவு ஊழியர்கள்
குறைந்த அளவு உதவியாளர்களும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக, அரசு வாகனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள ஊழியர்கள் அலுவலகம் வரமுடிந்தது. பிற ஊழியர்கள் வரவில்லை என்று தெரிகிறது. தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, இளைஞர் விவகார துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் இன்று காலை, ரொம்ப சீக்கிரமே அலுவலகம் வந்த சில மத்திய அமைச்சர்கள் ஆகும்.
பாதி பேர்
அமைச்சர்கள் தங்களது மொத்த ஊழியர்களில் பாதிக்கு பாதி பேரைக்கொண்டு பணியாற்றி வருவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான ஊழியர்களுக்கு அரசு வாகனங்கள் உள்ளன. ஆனால் உதவி ஊழியர்களுக்கு அரசு வாகனங்கள் கிடையாது என்பதால் பொதுப் போக்குவரத்து இல்லாததால் அவர்களால் பணிக்கு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
பரிசோதனை
அதேநேரம், அமைச்சர்களாக இருக்கட்டும், அல்லது அவர்களின் அதிகாரிகளாக இருக்கட்டும், அலுவலகம் செல்வதற்கு முன்பாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். வாசலில் வைத்து அவர்களது வாகனங்கள் கிருமிநாசினி மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.
சலுகைகள்
கடந்த சனிக்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது நாடு முழுக்க லாக்டவுன், நீட்டிக்கப்படும் என்றும், அதே நேரம், ஒரு சில பகுதிகளில், ஒரு சில துறைகளுக்கு சலுகைகள் வழங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
15 வகை தொழில்கள்
இந்த நிலையில்தான் 15 வகையான தொழில்களுக்கு குறைந்து தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களும், பணிக்கு திரும்பியுள்ளனர். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தளர்வு நடவடிக்கைகள் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான், பார்க்க வேண்டும்.