மத்திய அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு... வேலையை காட்டும் பிரதமர் மோடி
Recommended Video
டெல்லி: மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தங்கள் அலுவலகம் வர வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. இதனை அடுத்து, பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக கடந்த 30-ந்தேதி பதவி ஏற்றார்.
அவரது அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் இடம் பெற்று உள்ளனர். 24 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 9 பேரும், ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் இடம் பெற்று உள்ளனர்.
வெளிநாடு செல்வதற்கும் கட்டுப்பாடு
இந்தநிலையில், பணியில் பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும்படியும் வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் கலாசாரத்திற்கு முடிவுகட்டுமாறும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமலில் இருக்கும் 40 நாட்களில் அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு வலியுறுத்தல்
அமைச்சகத்தின் பணிகளில் வளர்ச்சிகள் குறித்து அதிகாரிகளுடனும் எம்.பிக்களுடனும் ஆலோசனை நடத்துமாறும் மூத்த அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அமைச்சகங்களும் 5 ஆண்டு திட்டம் ஒன்றை வகுத்து அதன் அடிப்படையில் முதல் நூறு நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்துமாறும் அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆடம்பரம் வேண்டாம்
முன்னதாக, மத்திய அமைச்சர் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும், தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆடம்பரம் வேண்டாம். பகட்டான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம்.
பணியாற்ற வேண்டும்
அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒரு சிறிய தவறு கூட நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறை எடுத்தது இல்லை
அதே சமயம், நான் இதுவரை விடுமுறை எடுத்ததையோ, ஒரு வாரம் காணாமல் போனதையோ அல்லது ஓய்விற்காக எங்காவது சென்றதையோ யாராவது கேட்டுள்ளீர்களா? நான் செய்யும் ஒவ்வொரு செயல், எடுக்கும் ஒவ்வொரு முடிவு குறித்தும், செய்யும் வேலை குறித்தும் கணக்கு காட்டி வருகிறேன் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது நினைவிற்கூறியது.