அதலபாதாளத்தில் ஜெட் ஏர்வேஸ்.. சர்வதேச வழித்தடங்களை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்க ஆலோசனை
டெல்லி: ஜெட் ஏர்வேஸின் சர்வதேச வழித்தடங்களை வேறு விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது முடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி முதல் தனது விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் அந்நிறுவனம் பெற்ற ரூ.8,200 கோடி கடன் நிலுவையில் உள்ளது.
அந்நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 85-க்கும் மேற்பட்ட விமானங்களின் பதிவுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. செலுத்தப்படாத கடனை கருத்தில் கொண்டு மற்ற விமான நிறுவனங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்10 போயிங் ரக விமானங்கள் வாங்க கொடுக்கப்பட்ட ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஒ உட்பட பல முக்கிய பதவியில் இருந்தவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டனர்.
அதே போல இந்தியாவின் மிகப் பழமையான தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் விமானங்களை மீண்டும் விண்ணில் பறக்க வைப்பதற்கு, உரிய ஏலத்தை எடுக்க முதலீட்டாளர்கள் யாரும் ஆர்வமாகவும் இல்லை.
இந்நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் சர்வதேச வழித்தடங்களை மறுசீரமைப்பு செய்து, பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்குவது தொடர்பாக ஏர் இந்தியாவுடன் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே தற்போது நீண்ட தூர சர்வதேச வழித்தடங்களுக்கு இயக்கப்படுகிறது. லண்டன், நியூயார்க் உள்ளிட்ட பல வழித்தடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது
ஜெட் ஏர்வேஸ் கடனில் தத்தளித்தாலும் இன்னும் இயங்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிறுவனத்தை மீட்டெடுத்தால் முன்பைவிட அதிக வழித்தடங்களில் இயங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.