தீயணைப்பு துறை இயக்குநராக இன்று ஒரு நாள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுங்கள்.. விடாமல் துரத்தும் உள்துறை
டெல்லி: சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனவரி 11-ஆம் தேதியை ஓய்வு பெற்ற நாளாக கருதுமாறு அலோக் வர்மா கடிதம் மூலம் கேட்டுக் கொண்ட நிலையில் புதிதாக மாற்றப்பட்ட தீயணைப்பு துறை இயக்குநர் பதவியில் இன்று ஒரு நாளாவது பணியாற்றிவிட்டு செல்லுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் கடந்த 11-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குநருக்கான தேர்வு குழு கடந்த 10-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அலோக் வர்மா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டார்.
எனினும் அவருக்கு 2 ஆண்டு கால சிபிஐ இயக்குநராக பதவி வழங்கப்பட்டது. அதன்படி அவர் அப்பதவியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி, அதாவது இன்றுடன் ஓய்வு பெற வேண்டும். ஆனால் சிபிஐ இயக்குநர் பதவியில் பல்வேறு இடர்பாடுகளால் அலோக் வர்மா தீயணைப்புத் துறை இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தான் அப்பதவியை ஏற்கும் வயதை கடந்து விட்டேன். எனவே சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து வெளியேறிய ஜனவரி 11-ஆம் தேதியை நான் ஓய்வு பெற்றவராக அறிவிக்க வேண்டும் என மத்திய பணியாளர் நலத் துறைக்கு அலோக் வர்மா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் தீயணைப்பு துறை இயக்குநர் பணியில் உடனடியாக சேர உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் அப்பணியில் சேர்ந்துவிட்டு ஓய்வு பெறுங்கள் என கூறியுள்ளது அலோக் வர்மாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.