அன்லாக் 4.0.. சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.. சிறப்பு விமானங்களுக்கு அனுமதி!
டெல்லி: செப்டம்பர் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்க, அமெரிக்க நாடுகள், அட்லாண்டிக் நாடுகள் என்று 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினார்கள்.
10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இதன் மூலம் தாயகம் திரும்பினார்கள். இந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுக்க மத்திய அரசு மூலம் தற்போது அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அன்லாக் 4.0 செயல்முறை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அன்லாக் 4.0வின் கீழ் செப்டம்பர் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இயக்கும் வந்தே பாரத் மிஷன் போன்ற சிறப்பு விமானங்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கும்.
அன்லாக் 4.0: மத நிகழ்வுகள், பொது கூட்டங்களை நடத்த செப்.21 முதல் அனுமதி.. விதிமுறைகள் அறிவிப்பு
உள்நாட்டு விமான போக்குவரத்து எப்போதும் போல தொடர்ந்து செயல்படும். சர்வதேச சரக்கு விமான போக்குவரத்தும் எப்போதும் போல தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.