ஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு
டெல்லி: நவம்பர் 30-ஆம் தேதி வரை நாடு முழுக்க பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நவம்பர் 30-ஆம் தேதி வரையில் அப்படியே தொடரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 5 என்ற பெயரில் ஒரு அறிவிப்பு மற்றும் தளர்வை வெளியிட்டது, நவம்பர் மாதத்திற்கும் பொருந்தும்.
கொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு
சர்வதேச விமானங்கள்
கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு அன்லாக் என்ற பெயரில் ஒவ்வொரு விஷயங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள்-தளர்வுகள் அன்லாக் 5 என்று அழைக்கப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. சர்வதேச விமான போக்குவரத்துக்கு மட்டும் தடை நீடித்தது. அதுவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க கூடிய விமானங்கள் இயங்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் இந்த தடை உத்தரவு சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது.
சிறப்பு விமானங்கள்
இதே மாதிரியான தடை உத்தரவு இப்போதும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் மாதம் முழுக்க சர்வதேச விமானங்கள் இயங்காது. சிறப்பு விமானங்கள் மட்டும்தான் இயங்கும் என்பது தெரிகிறது. எனவே வெளிநாட்டிலிருந்து இந்தியா வர விரும்புவோர் எளிதாக அதை செய்ய முடியாது. இது அவர்களுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இ பாஸ் தேவையில்லை
அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் ஒரு விஷயத்தை உறுதிபட தெரிவித்துள்ளது. அது என்னவென்றால், மாநிலங்களில் இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த விதமான பாஸ் அல்லது அனுமதி பெற தேவை கிடையாது. எந்த ஒரு அதிகாரியிடமும் சிறப்பு அனுமதியும் பெற தேவை கிடையாது. எந்த ஒரு தடையுமின்றி மாநிலங்கள் இடையே போக்குவரத்து செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்கள்
அக்டோபர் மாதம் இந்த சலுகை வழங்கப்பட்டு இருந்தபோதிலும், சில மாநிலங்கள் கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசுக்கு மறுபடி பாஸ் தேவை கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த விதிமுறை தளர்வு அனைத்தும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு மட்டும்தான் பொருந்தும். எந்தப் பகுதியாவது நோய்தொற்று பரவலால் கட்டுப்பாட்டு மண்டலம் என்று சீல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு இந்த விதிமுறை தளர்வு பொருந்தாது.