உன்னாவ் வழக்கு.. எம்எல்ஏ குல்தீப் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு!
உன்னாவ் பாலியல் வழக்கு தொடர்பாக லக்னோவில் உள்ள எம்எல்ஏ குல்தீப் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.
டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கு தொடர்பாக லக்னோவில் உள்ள எம்எல்ஏ குல்தீப் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.
2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர். தற்போது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் இதனால் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளார்.
அந்த பெண் உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் உன்னாவ் கொடூரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட உள்ளது. ஆனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கை தொடர்ந்து சிபிஐதான் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக லக்னோவில் உள்ள எம்எல்ஏ குல்தீப் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. காலையில் தொடங்கிய ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
லக்னோ, உன்னாவ், பண்டா உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இதில் குல்தீப்பிற்கு சொந்தமான பண்ணை வீடு, அலுவலங்கள், நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் சிபிஐ இந்த அதிரடியில் இறங்கி உள்ளது.