உன்னாவ் பெண்.. அச்சுறுத்தல் தொடர்பாக ஜூலை 12ம் தேதியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்
டெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஜுலை 28ம் தேதி விபத்தில் சிக்கிய நிலையில், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் ஜூலை 12ம் தேதியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் தன்னிடம் வேலை கேட்டு வந்த 17வயது பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். முன்னதாக எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நீதி வேண்டும் என்று கோரி உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்தார்.
சிறையில் குல்தீப் சிங்
இதனால் பிரச்னை பூதாகரமானதால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குல்தீப் சிங் சிறையில் இருக்கிறார்.
இரண்டு பெண்கள் பலி
இந்நிலையில்தான் கடந்த ஞாயிறு அன்று, பாதிக்கபட்ட பெண் உறவு பெண்கள் மற்றும் வழக்கறிஞருடன் பயணித்த கார் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்களும் உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் கடுமையான காயங்களுடன் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொலை மிரட்டல்
இந்நிலையில் பாஜக எம்எல்ஏ குல்தீப்பின் ஏவின் சகோதர் மனோஜ் சிங் மற்றும் அவரது மனைவி சாசி ஷிங் மற்றும் அவரது மகன் ஆகியோர் புகாரை வாபஸ் வாங்காவிட்டால் கொன்றுவிடுவோம் என உன்னாவ் பெண் குடும்பத்தினரை முன்பே மிரட்டி உள்ளனர்.
உன்னாவ் பெண் கடிதம்
இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா, அத்தை ஆகியோர் கடந்த ஜூலை 12ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தான் கடந்த ஜூலை 28ம் தேதி உன்னாவ் பெண் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமளி
இந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் நாடாளுமனறத்தில் இப்பிரச்சனையை எழுப்பி ஸ்தம்பிக்க வைத்தன.