மசூத் அசாரின் தடைக்கு ஒப்புக்கொண்ட சீனா.. மனமாற்றத்திற்கு மோடி காரணமா? பின்னணி என்ன?
டெல்லி: மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு சீனா ஒப்புக்கொண்டதற்கு பின் நிறைய காரணங்கள், அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
நேற்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர்தான் மசூத் அசார்.
இவர் தடை செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவிற்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.
ஈரானுடன் இன்று 'பிரேக் - அப்' செய்யும் இந்தியா.. நாளையே பெட்ரோல் விலை உயரும்.. இனிதான் சிக்கலே!
எப்படி
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று 10 வருடங்களாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி, சீனா தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது.
மிக மோசம்
அமெரிக்கா உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உலக நாடுகள் எல்லாம் ஒரு பக்கம் நின்றாலும் சீனா மட்டும் எதிர் திசையில் இருந்தது. மசூத் அசாருக்கு தொடர்ந்து சீனா ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது நிறைய கேள்விகளை எழுப்பியது. அதேபோல் இந்தியாவின் கோரிக்கை இது என்பதாலும் சீனா தனது நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்தது.
தடை
இந்த நிலையில்தான் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தது. ஏற்கனவே பல முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதெல்லாம் சீனா இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. அதேபோல் இப்போதும் சீனா தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.
புல்வாமா தாக்குதல்
அதன்பின் புல்வாமா தாக்குதல் நடந்தது. மசூத் அசார் நடத்திய இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இதனால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீண்டும் அசாருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அப்போதும் சீனா தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் சீனா நேற்று இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து அசாருக்கு எதிராக தடை விதிக்கப்பட்டது.
எப்படி நடந்தது
நான்கு காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கிறது. 10 வருடமாக அமைதியாக இருந்த சீனா மனம் மாற முக்கிய காரணம் இருக்கிறது. முதலாவது, அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு இது தொடர்பாக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட சிலர் நேரடியாக சீன தலைவர்களிடம் இது தொடர்பாக பேசி இருக்கிறார்கள்.
இரண்டாவது காரணம்
அதற்கு அடுத்தபடியாக இந்த தீர்மனத்தை நேரடியாக சமர்ப்பித்து பொது வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. இப்படி வாக்கெடுப்பு நடத்தினால், யார் இதற்கு எதிராக வாக்களிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு தீவிரவாதி அசாருக்கு ஆதரவாக சீனா நிலைபாடு எடுத்தால் அது அந்நாட்டிற்கு பெரிய பின்னடைவாகும். அமெரிக்காவின் இந்த லாக்கில் சீனா வசமாக சிக்கிக் கொண்டது.
சைலன்ட் அறிக்கை
அதேபோல் இதில் ''silence procedure'' என்ற முறையை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி ஒரு தீர்மானம் நிறைய பேரின் ஆதரவு இருந்தும் நிறைவேறாமல் இருந்தால் குறிப்பிட்ட நாளுக்கு பின் அது தானாக நிறைவேறிவிடும். அசாருக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா ''silence procedure'' தீர்மானமாக மாற்றியது. இதனால் சீனாவிற்கு இதை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை. இல்லையென்றால் சீனாவின் கருத்தை கேட்காமலே தீர்மானம் நிறைவேறும்.
சீனாவின் ஒரு கோரிக்கை
ஆனால் இதில் சீனா ஒரே ஒரு கோரிக்கை வைத்தது. அதன்படி, என்ன நடந்தாலும் இந்த தீர்மானத்தில் புல்வாமா, பாகிஸ்தான், காஷ்மீர் பற்றி எதுவும் இருக்க கூடாது என்று கூறியது. அதன்படியே காஷ்மீர் குறித்து தீர்மானத்தில் எதுவும் இல்லை. ஆனால் புல்வாமா குறித்து தீர்மானத்தில் சில தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இந்தியா என்ன
அதேபோல் இந்தியா சார்பாக பிரதமர் மோடி, அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து சீனாவிற்கு அழுத்தம் அளித்தனர். இதுவும் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் தற்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இவர் தடை செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவிற்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.