விகாஸ் தூபே கூட்டாளிகளை வேட்டையாடும் உ.பி. போலீஸ்.. அதிகாலையே சீறிய குண்டுகள்.. 2 பேர் என்கவுண்டர்
டெல்லி: உத்தரபிரதேசத்தின் கான்பூரில் கடந்த வாரம் 8 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாதா விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரின் 2 கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லியில் இருந்து சுமார் 1 மணி நேர பயணத்தில் அமைந்துள்ள நகரம் பரிதாபாத். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தொழில் நகரம் இது. இங்கு விகாஸ் தூபேயின் கூட்டாளிகளில் ஒருவரான பிரபாத் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அந்த நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடியாக அவரை மடக்கிப் பிடித்தனர்.
பஞ்சரான போலீஸ் வேன்
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியுடன் இவரும் கான்பூர் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல்துறையினரின் வேன் டயர் நடுவே பஞ்சர் ஆனதால் அதை மாற்றுவதற்கான வேலைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பிரபாத் போலீசாரிடமிருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு அவரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.
தலைக்கு ரூ.50 ஆயிரம்
எனவே தற்காப்புக்காக காவல்துறையினர் அவர் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியபோது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் பலியானார். மற்றொரு கூட்டாளி பூவா தூபே என்ற பிரவீன் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது தலைக்கு உத்தரபிரதேச மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காரை கொள்ளையடித்து ஓடிய கும்பல்
எட்டாவா என்ற பகுதியில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. தலைநகரம் லக்னோவில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று ஸ்கார்பியோ வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த காரில் தப்பித்து ஓட முற்பட்ட போது சுமார் ஒரு மணி நேரம் கழித்து காவல்துறையினரால் அந்த வாகனம் சுற்றி வளைக்கப்பட்டது. காவல்துறையினர், விரட்டிச் சென்றபோது காரில் இருந்தவர்கள் திருப்பி தாக்கியுள்ளனர்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் பிரவீன் கொல்லப்பட்டார் என்று தெரிவித்தார்.
துப்பாக்கிகள் பறிமுதல்
இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டலும், குண்டுகளும் என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கான்பூர் நகரத்தின் சவும்பேப்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தாதா, விகாஸ் தூபேயை கைது செய்வதற்காக சுமார் 50 காவல் துறையினர் கடந்த வாரம் சென்ற போது ரவுடிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வரிசையாக என்கவுண்டர்
கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்பு கொண்ட தூபே, தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் அறிவித்தது உத்தரப்பிரதேச அரசு. கடந்த புதன்கிழமை அமர் தூபே என்ற இவரின் மற்றொரு கூட்டாளி உத்தரப்பிரதேச மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விகாஸ் தூபேயின், 15 கூட்டாளிகளில் நம்பர் ஒன் கூட்டாளி அமர் தூபே. வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் தாதாவின் கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.