2013ம் ஆண்டிலேயே போன், மெயில் ஒட்டுக்கேட்கிறாங்க.. வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட காங்கிரஸ்
டெல்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தொலைபேசி இணைப்புகள், இ மெயில்கள் கண்காணிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டிலுள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட பத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி 'பாதுகாப்பற்ற சர்வாதிகாரி' என்று கடுமையாக விமர்சித்தார்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் சகட்டு மேனிக்கு கருத்துகளை பதிவு செய்தனர். இந் நிலையில், தற்போதைய பாஜக ஆட்சியில் மட்டும் இல்லாமல் காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலத்திலேயே தொலை பேசி இணைப்புகள், இ மெயில்கள் கண்காணிக்கப் பட்டது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ப்ரோ சென்ஜித் மோண்டால் என்பவர், 'தகவல்கள் பரிமாற்றங்கள் உளவு பார்க்கப்படுவது' குறித்து தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்டிஐ கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
அந்த மனுவுக்கு 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உள்துறை அமைச்சகம் பதில் ஒன்றை அளித்துள்ளது. அப்போது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் ஆட்சியில் இருந்துள்ளது.
அதற்கு ஆர்டிஐ மூலம் அப்போதைய மத்திய அரசாங்கம் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது :
ஒவ்வொரு மாதமும் 7500 முதல் 9000 வரையிலான தொலைப்பேசி இணைப்புகள் உளவு பார்க்கப்படுகிறதது. 300 முதல் 500 வரையிலான இ-மெயில்கள் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தகவல்கள் வேவு பார்க்கப்பட்டது குறித்து அப்போதைய மத்திய அரசாங்கமே ஆர்டிஐ மூலம் பதில் கூறியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் பாஜகவின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த காங்கிரஸிற்கு இந்நிகழ்வு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.