சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்
டெல்லி: பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் மற்ற ஜாதியினரைவிட உயர்ஜாதியினர் ஆதிக்கம் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேபோல் தலித் மற்றும் பழங்குடியினரைவிட முஸ்லீம்கள் அதிக அளவு சமூக வலைதளத்தை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஸ்போர்ட்போன்களின் வருகைக்கு பின் ஊடகங்களைவிட சமூக வலைதளங்கள் தான் மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சமுக வலைதளம் மூலம் மக்களிடம் பரப்ப முடியும் என்பதால் இதில் அனைத்து தரப்பு மக்களுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.
இது தொடர்பாக கடந்த 2014, 2017, 2018, மற்றும் 2019 லோக்சபா தேர்தலில்போது 24,236 வாக்காளர்களிடம் அபிவிருத்தி சங்கங்களின் ஆய்வு மையம் (சிஎஸ்டிஎஸ்) ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது, உயர் சாதி வாக்காளர்களிடையே சமூக ஊடகங்களில் அதிக ஆதரவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் தலித் மற்றும் பழங்குடியினரை விட உயர்ஜாதி மக்கள் இரண்டு மடங்கு அதிக அளவு சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்துவது தெரியவந்துள்ளது. இதன்படி உயர்ஜாதியினர் தான் கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இரண்டாவது இடத்தில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். 15 சதவீதம் அளவுக்கு உயர்ஜாதியினரும்,தலித் மற்றும் பழங்குடியினர் 8 மற்றும் 7 சதவீதமும், 9 சதவீதம் ஒபிசி பிரிவினரும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் 75 சதவீத பழங்குடியினருக்கும், 71 சதவீத தலித்துகளுக்கும் சமூக வலைதளங்களில் குறித்து சுத்தமாக தெரியவில்லையாம். அதேநேரம் உயர்ஜாதியில் 54 சதவீதமாக இந்த அளவு உள்ளது.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் ஷேர் செய்வதில் 20 முதல் 22 சதவீதம் அளவுக்கு உயர்ஜாதியில் ஆதிக்கம் உள்ளதாம். டுவிட்டரில் 12 சதவீதம் அளவுக்கு தலித்துக்கள் ஆதிக்கம் இருக்கிறதாம். பழங்குடியில் 6 சதவீதம் அளவுக்கு பயன்படுத்துவதாக சொல்கிறது ஆய்வு.