மத்திய அரசை கவிழ்ப்பதுதான் டெல்லி கலவரத்தின் நோக்கமாம்.. சொல்கிறது டெல்லி போலீஸ்
டெல்லி: டெல்லியில் இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கான விதை, 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தூவப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசை கலைப்பதுதான், கலவரங்களின் நோக்கம் என்றும், டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு துவங்கி விட்ட போதிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இது மோதலாக உருமாறியது.
கன்னடத்தில் கூட பாஸாகிட்டேன்... நன்னடத்தை நாட்களை கணக்கில் சேருங்க.. எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்?
டெல்லி கலவரம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக மற்றும் வலதுசாரியினர் போராட்டம் நடத்தியதால் இரு தரப்புக்கு இடையே மோதல் போக்கு உருவானது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். வட கிழக்கு டெல்லி பகுதியில்தான் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.
குற்றப் பத்திரிக்கை
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பிறகு, மற்றும் கொரோனா ஊரடங்கு போன்றவற்றின் காரணமாக டெல்லியில் அமைதி திரும்பியது. இந்த நிலையில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 2,695 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.இந்த குற்றப்பத்திரிகையில் தாஹிர் உசேன், பிஞ்ச்ரா டோட் அமைப்பின் தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால், முன்னாள் டெல்லி பல்கலைக்கழக மாணவர் கல்பிஷா, ஜாமியா மிலியா இஸ்லாமியா பிஎச்.டி மாணவர் மீரான் ஹைதர் மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சபூரா உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள்
இந்த குற்றப்பத்திரிகையில் கலவரத்தை தூண்டியது தேச விரோத சக்திகள் என்று குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களை பாருங்கள்: ஒரு அரசாங்கத்தை, தங்களது அரசியல் ரீதியான கோரிக்கையை ஏற்க செய்ய கட்டாயப்படுத்துவது தீவிரவாத நடவடிக்கை என்று வரையறை செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்கள், பெட்ரோல் பாம்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் மீது நடந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.
தீவிரவாத நடவடிக்கை
குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டும் என்பதற்காக இதுபோல வன்முறை நடத்தப்பட்டுள்ளது. எனவே இது தீவிரவாத நடவடிக்கை என்ற பிரிவின்கீழ்தான் வரும். சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் 15 ஆவது பிரிவில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
எதெல்லாம் தீவிரவாதம்
50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது, 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைந்துள்ளது ஆகியவையும் தீவிரவாத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ்தான் வரும். அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு கிடைக்க விடாமல் தடை செய்தது என்ற குற்றமும் தீவிரவாத நடவடிக்கைகள் பிரிவின்கீழ்தான் வரும். இவ்வாறு அந்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் வருகை
அதுமட்டுமின்றி, குற்றப்பத்திரிக்கையுடன், தொலைபேசி உரையாடல் பதிவுகள், பண பரிமாற்றங்கள், டெல்லி போராட்ட ஆதரவு குழு மற்றும் போர் வீரர்கள் என்ற பெயரிலான வாட்ஸ்அப் குரூப்களில் நடைபெற்ற உரையாடல்கள் ஆகியவற்றுக்கான ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளது.
சதி வேலையில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைக்கு மத்திய அரசை பணிய வைக்க வேண்டும் என்று நினைத்தனர். அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை செய்தபோது இந்த வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
இந்த சதிகள் அனைத்துக்கும் ஒரே நோக்கம்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். இதற்காக மதக்கலவரங்களை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர். இந்த சதி திட்டமிட்டு படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஜேஎன்யூ முஸ்லிம் மாணவர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு மத துவேஷம் விதைக்கப்பட்டுள்ளது. சில டிஜிட்டல் மீடியா நிறுவனங்களும் இந்த வெறுப்பு பிரச்சாரங்களுக்கு துணை போயுள்ளன. இவ்வாறு கூறும் அந்த குற்றப்பத்திரிகையில் கடைசி வரிகள் இவைதான். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் இந்த வன்முறைகளில் தொடர்புள்ளோர்களின் பேச்சும், நடத்தையும் அரசுக்கு எதிராகத்தான் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபில் மிஸ்ரா வாக்குமூலம்
அதேநேரம் கலவரத்தை தூண்டியதில் முக்கிய பங்கு வகித்ததாக சர்ச்சைக்குள்ளான பாஜகவின் முன்னணி தலைவர் கபில் மிஸ்ரா தொடர்பாகவும் குற்றப்பத்திரிக்கையில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. கபில் மிஸ்ராவிடமும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி இருந்த நிலையில் அவரது வாக்குமூலம் பற்றி குற்றப்பத்திரிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: நான் கலவரம் நடைபெற்ற இடத்துக்கு பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றேன். அங்கு நான் கலவரத்தை தூண்டும் வகையில் உரையாற்றவில்லை.
கபில் மிஸ்ரா வீடியோ
நான் சென்றபோது எனது அருகே துணை போலீஸ் கமிஷனர் இருந்தார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அதற்கு எதிராக நான் தர்ணா நடத்துவேன் என்று தான் தெரிவித்தேன். இவ்வாறு கபில் மிஸ்ரா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கபில் மிஸ்ரா டெல்லியில் கலவரம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக பிப்ரவரி 23ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவானவர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்துவதை போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தெருவில் இறங்குவோம்
அதில் அவர் பேசுகையில், டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் விரும்புகிறார்கள். எனவேதான் சாலைகளை அவர்கள் மூடி உள்ளார்கள். வன்முறை போன்ற சூழ்நிலையை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். இப்போது அமெரிக்க அதிபர் இந்தியா வருகை தந்துள்ளார். எனவே நாம் இங்கிருந்து கலைந்து செல்கிறோம். ஆனால் அடைக்கப்பட்டுள்ள சாலைகள் மறுபடியும் திறந்து விடப்படாவிட்டால் நாங்கள் காவல்துறையின் பேச்சை கேட்க மாட்டோம். நாங்களும் தெருக்களில் இறங்குவோம். இவ்வாறு கபில் மிஸ்ரா பேசுவதைப் போன்று அந்த வீடியோ காட்சிகள் இருந்தன.
திரும்ப திரும்ப கூறிய கபில் மிஸ்ரா
இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக காவல்துறையினர் கபில் மிஸ்ராவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதில் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுகையில், டெல்லி மக்களால் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் பார்க்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மக்கள் மனதில் முஸ்லிம்கள் பயம் ஏற்படுத்தியிருந்தனர். முஸ்லிம்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சாலைகளை அடைத்து வைத்துள்ளார்கள். இவ்வாறு கபில் மிஸ்ரா காவல்துறையிடம் கூறியதாக குற்றப்பத்திரிகையில் தகவல் இடம்பெற்றுள்ளது. அதே நேரம் தான் கலவரத்தை தூண்டவில்லை என்றும், அடுத்த மூன்று நாட்களுக்குள் காவல்துறை, அடைக்கப்பட்டுள்ள தெருக்களை திறந்துவிட வேண்டும் என்றுதான் தெரிவித்ததாகவும், போலீசாரிடம் கபில் மிஸ்ரா திரும்பத் திரும்ப கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்த குற்றப்பத்திரிக்கை உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்கிறது என்று குற்றம்சாட்டி, இதில் குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி, சமீபத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, எதிர்க் கட்சி எம்பிக்கள் குழு சந்தித்தது. காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல், மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, திமுக எம்.பி. கனிமொழி, ராஷ்ட்ரிய தள ஜனதா எம் பி மனோஜ் ஜா உள்ளிட்டோர் அக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.