சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க முடியாது...உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்!!
டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்பு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே, முன்பு திட்டமிட்டபடி, தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக தேர்வை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தேர்வர்கள் 20 பேர் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையில், இந்த தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்து இருந்தது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமும் அளித்து இருந்தது.
தென்னிந்தியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்
இந்த நிலையில் ஏன் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிடுமாறு, யுபிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
நாட்டின் 72 நகரங்களில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். ஏற்கனவே மே 31 மற்றும் ஜூன் 5ஆம் தேதிகளில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.