இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி
டெல்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்க அரசு கூடுதலாக 25 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் என்று அறிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை கூடுதலாக அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆண்டனி பிளிங்கன் செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போது, இந்தியா முழுவதும் தடுப்பூசி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற இந்த நிதி உதவும் என்று கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு நாட்கள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது, இருநாட்டின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார். மேலும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது எனக்கூறியதுடன் , இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனா அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்க அரசு கூடுதலாக 25 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் என்று கூறினார். இந்த நிதி தடுப்பூசி விநியோக சங்கிலி தளவாடங்களை வலுப்படுத்த உதவும் என்றும் தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை தடுத்து தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும். மேலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க உதவுவதன் மூலம் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று கூறினார்.
வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறும் போது, இந்தியாவில் தடுப்பூசி உற்பத்திக்கு மூலப்பொருட்கள் விநியோகச் சங்கிலியைத் திறந்து வைக்க பிடனின் நிர்வாகம் ஒப்புக்கொணடற்கு நன்நி தெரிவித்தார். இரண்டாவது கோவிட் அலையின் போது அமெரிக்கா தந்த ஆதரவுக்கும் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.