மெலானியா டிரம்ப் அரசு பள்ளி வருகை.. வேண்டுமென்றே கெஜ்ரிவால் புறக்கணிப்பா.. அமெரிக்கா விளக்கம்
டெல்லி: டெல்லியில் உள்ள அரசு பள்ளிக்கு அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப் நாளை செல்ல உள்ள நிலையில் , அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சை எழுந்தது. இதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக இந்தியாவுக்கு நாளை வருகிறார். அவர் நேராக அகமதாபாத்திற்கு வந்து அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிடுகிறார். அத்துடன் பிரதமர் மோடியுடன் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை மனைவி மெலானியாவுடன் சுற்றி பார்க்கிறார். இந்த பயணத்தின் போது டிரம்புடன் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெரெட் குஷ்னர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் வருகை தருகிறார்கள்.
மெலானியா பங்கேற்பு
இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது அவர்கள் இரு தரப்பு நல்லுறவு குறித்தும் பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இவர்கள் ஆலோசனை செய்யும் நேரத்தில் மனைவி மெலானியா டெல்லியில் உள்ள பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
சிசோடியா
அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகுப்பை மெலானியா பார்வையிடவுள்ளதால் அவரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பதாக சொல்லப்பட்டது. மேலும் மெலானியாவுக்கு பள்ளி முழுவதையும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுற்றிக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
மத்திய அரசு தலையீடு
இந்த நிலையில் மெலானியாவின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக கெஜ்ரிவாலும் சிசோடியாவும் பங்கேற்பது சரியாக இருக்காது என அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கும் என்ற சந்தேகம் ஆம் ஆத்மி கட்சிக்கு எழுந்தது. இன்று காலை முதல் இந்தியாவின் பல்வேறு ஊடகங்களில் இந்த சர்சசைகள் வெளியானது.
அமெரிக்கா விளக்கம்
இந்நிலையில் அமெரிக்க தூதரகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில். மெலானியாவின் நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்வதில் அமெரிக்க தூதரகம் எந்த ஆட்சேபனையும் கொண்டிருக்கவில்லை. இருந்த போதிலும் இது ஒரு அரசியல் நிகழ்வு அல்ல என்பதையும், கல்வி, பள்ளி மற்றும் மாணவர்கள் மீது கவனம் செலுத்துவதை உறுதி செய்வதே சிறந்தது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதை நாங்கள் பாராட்டுகிறோம் " என்றார்.