காஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போதைய அதிபர் டிரம்ப்பும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய மோடி அழைத்ததாக தவறான தகவலை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடங்கிய முதலே பாகிஸ்தான் பக்கம்தான் அமெரிக்கா நின்று வந்ததை உலகம் அறியும். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தியது. ஆனால் பொதுவாக்கெடுப்பு பற்றி இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்பதை புரிந்து கொண்டு கடுப்பானது அமெரிக்கா.
அதனால் 1962-ல் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை அள்ளிக் கொடுத்தது. அந்த தைரியத்தில்தான் இந்தியாவுடன் யுத்தத்துக்கு வந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க எப்போதும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் கழுகுதான் அமெரிக்கா.
கிளிண்டன் மும்முரம்
1990களில் அமெரிக்கா அதிபராக இருந்த சீனியர் புஷ், காஷ்மீர் பிரச்சனைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்பதை வலியுறுத்தினார். ஆனால் கிளிண்டன் அதிபராக வந்த போது காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முயற்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டன. ஆனால் அது கைகொடுக்கவில்லை. அதனால் சீனியர் புஷ் பின்பற்றிய நிலைப்பாட்டையே அமெரிக்கா பின் தொடர்ந்தது.
தலிபான்களை வேட்டையாடிய அமெரிக்கா
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் நிலை மாறத் தொடங்கியது. அல்கொய்தா, தலிபான்களை வேட்டையாடித்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா. இந்த இரு பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான். அதனால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியது அமெரிக்கா. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் என்பது ஆப்கானிஸ்தான் வரை நீடித்தது.
இந்தியாவுக்கான ஒபாமா ஆதரவு
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு அவசியமானதாக இருந்தது. அப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஒபாமா அதிபராக வந்த பிறகு அமெரிக்கா, இந்தியாவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியது.
பாக். பயங்கரவாத தாக்குதல்
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேசத்தின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது. அமெரிக்காவும் இந்தியாவுடன் கை கோர்த்து நின்றது. தற்போதைய அதிபர் டிரம்ப் எதை எடுத்தாலும் சர்ச்சை என்றுதான் செயல்பட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்தியாவின் நிலைப்பாடு பற்றி எதுவும் தெரியாமல் உளறிக் கொட்டி மத்தியஸ்துக்கு கிளம்பியிருக்கிறார். 1972-ம் ஆண்டு சிம்லா உடன்பாடானது இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும் என்கிறது. இப்போது அமெரிக்கா தலையிட நூல்விட்டுப் பார்ப்பது போல் பேசி இருக்கிறார் டிரம்ப் என்பதுதான் யதார்த்தம்.
மூக்குடைத்த இந்தியா
ஏனெனில் தெற்காசியாவில் இந்தியா, சீனாவைத் தாண்டி அமெரிக்காவால் எதுவும் செய்ய இயலாமல் இருந்தது. தற்போது போர்க்குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்களின் பெயரால் இலங்கைக்குள் நுழைந்து சட்டாம்பிள்ளைத்தனம் செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. இலங்கையில் வைத்த காலை அகலப்படுத்த விரும்பிய டிரம்புக்கு எடுத்த எடுப்பிலேயே இந்தியா மூக்குடைப்பை தந்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து..