5ஜி தொழில்நுட்பம்....3 நாடுகள் கூட்டு...பெங்களூருக்கு வாய்ப்பு...சீனாவுக்கு பின்னடைவு!!
டெல்லி: உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் மனிதர்களை மட்டும் விட்டு வைக்கவில்லை, பெரிய அளவில் வர்த்தக மாற்றங்களையும் நாடுகளுக்குள் உருவாக்கி வருகிறது. இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவது சீனாதான். தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த மூன்று நாடுகளும் இணைந்து வெளிப்படையாக, நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப அபிவிருத்தியை முத்தரப்பு முயற்சியின் மூலம், மூன்று நாடுகளின் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த வல்லுநர்களின் ஒத்துழைப்பில் இந்த தொழில்நுட்பத்தை பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 2017ல் இஸ்ரேலுக்கு மோடி பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போதே இந்த மும்முனை திட்டத்துக்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குறிப்பிட்டு இருக்கும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான ஏஜென்சியின் துணை நிர்வாகி போனனி கிளிக், ''5ஜி நெட்வொர்க் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பது துவக்கத்தின் முதல்படிதான். இன்னும் தொழில்நுட்ப ராஜதந்திரங்கள், உயர் தொழில்நுட்பம், வளர்ச்சி என்று மூன்று நாடுகளும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும்.
ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் - விவரிக்க முடியாத பக்கவிளைவு
இந்த 5ஜி தொழிநுட்பம் சிலிக்கான் வேலி, பெங்களூரு மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் இருந்து இணைந்து பணியாற்றுவது போல் இருக்கும். இந்த மூன்று நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்'' என்றார்.
இஸ்ரேலில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியா தரப்பில் எம் ஆர் ரங்கசுவாமி கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ''தொழில்நுட்பத்துக்கு இந்த மூன்று நாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நம்பமுடியாத விஷயங்கள் எல்லாம் இந்த மூன்று நாடுகளில் இருந்தும் வெளிவரும்'' என்றார்.