இந்திய ஊடுருவல்...சீன அதிபர் ஜிங்பிங்கிற்கு மிகப்பெரிய தோல்வி..அமெரிக்க நாளிதழ் விமர்சனம்!!
டெல்லி: எல்லையில் இந்தியாவுக்கு எதிராக பெரிய அளவில் ஊடுருவலை மேற்கொண்ட சீன ராணுவம் தோல்வி அடைந்து இருப்பதையடுத்து, அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிர்பாராத தோல்வி ஏற்பட்டு இருக்கிறது என்று அமெரிக்க நாளிதழ் நியூஸ்வீக் விமர்சனம் செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூஸ்வீக் வெளியிட்டு இருக்கும் செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் சீனாவின் ஆக்ரோஷமான ராணுவத்தின் சிற்பி 67 வயது ஜி ஜின்பிங். இவரால்தான், இவரது ஆலோசனையின் பேரில்தான் சீன ராணுவம் இந்திய எல்லையில் பெரிய அளவில் ஊடுருவலை மேற்கொண்டு எதிர்பாராத விதமாக தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. சீன ராணுவத்தின் தோல்வி எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்தத் தோல்விக்குப் பின்னர் சீன அதிபர் அடுத்து மிகப்பெரிய மிருகத்தனமான தாக்குதலை மேற்கொள்ளலாம். சீனாவின் முரட்டுத்தனமான ஒரு தலைவராக இருந்து வருகிறார். மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவராக இருக்கிறார். மத்திய ராணுவ கமிஷன் தலைவராக இருக்கிறார். மேலும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கிறார். இவர் அடுத்ததாக இந்திய நிலைகள் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு தயார் ஆனாலும் ஆகலாம்'' என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய சீன எல்லையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் பதற்றம் நிலவி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொடூரமாக கொன்று இருந்தது. இதையடுத்து கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
டிபென்ஸ் ஆப் டெமாகிரசிஸ் பவுண்டேஷன் கிளயோ பாஸ்கல் கூறியதாக குறிப்பிட்டு இருக்கும் நியூஸ்வீக், ''இந்த மோதலில் சீனா தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்திய தரப்பில் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். தோல்வியை சீனா ஒப்புக் கொள்ளாது'' என்று கூறியதாக குறிப்பிட்டு இருந்தது.
மேலும், மிகவும் உயரமான பகுதியில் சீனா ஆக்கிரமித்து இருந்த பகுதியை இந்தியா எடுத்துக் கொண்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்துள்ளது. இது சீன ராணுவத்தை ஆச்சரியப்படுத்தி இருந்தது. தெற்கில் இதுவரை சர்ச்சைக்குள்ளாகி இருந்த மூன்று இடங்கள் தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
Recommended Video
இதுவரை சீனாவின் தரைப்படை பெரிய அளவில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 1979ல் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் மோதல் வெடித்தபோது, சிறிய நாடான வியட்நாமிடம் சீனப் படை தோல்வியை சந்தித்து இருந்தது. இந்தியா புதிய உத்வேகத்தை எட்டியுள்ளது. புதிய துணிச்சல் அந்த நாட்டின் ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் லடாக் பின்னடைவை அடுத்து சீன ராணுவத்தை மீண்டும் ஜி ஜின்பிங் மாற்றி அமைக்கலாம்'' என்று குறிப்பிட்டுள்ளது.