அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
மைக் பாம்பியோவின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏவுகணை ஒப்பந்தம், உலகளாவிய தீவிரவாதம் மற்றும் எச் -1 பி விசாக்கள் போன்ற பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்தும் இந்த பயணத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான மைக் பாம்பியோ சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நாடுகளில் பயணத்தை முடித்து கொண்டு தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது எச் -1 பி விசா வழங்குவது மற்றும் ரஷ்யாவுடனான இந்திய உறவு என பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் மைக் பாம்பியோ. இந்த சந்திப்பு நிறைவடைந்த பிறகு அமெரிக்க அமைச்சருக்கு ஜெய்சங்கர் மதிய விருந்து அளித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலையும், அமெரிக்க அமைச்சர் பாம்பியோ சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனுமே இந்தியா நல்ல உறவுகளை பேணி வருகிறது. ஆனால் சில மாதங்களாக மேற்கண்ட இரு நாடுகளுக்குமிடையேகடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான கருத்தாய்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய கூடாது என்ற நியாயமான வாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. மோடி - பாம்பியோ இடையிலான பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு வர்த்தகம் ஒரு முக்கியமான விவாதப் பொருளாக இருந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், அடுத்த வாரம் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில் மைக் பாம்பியேவின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.