டெல்லியில் டிரம்ப்: ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை- காந்தி நினைவிடத்தில் அஞ்சலி
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடனான சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தியடிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் டிரம்ப்.
Recommended Video
அமெரிக்கா அதிபர் டிரம்ப், 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் அகமதாபாத், சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் சிறப்புரையாற்றினார். அகமதாபாத் நிகழ்ச்சிகளை நிறைவுசெய்த பின்னர், ஆக்ரா சென்றார் டிரம்ப்.
அங்கு மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலின் அழகை 1 மணிநேரம் ரசித்து மகிழ்ந்தார் டிரம்ப். இதன் பின்னர் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வருகை தந்தார் டிரம்ப். டெல்லி மெளரியா நட்சத்திர விடுதியில் டிரம்ப் குடும்பத்தினருடன் தங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில்..
இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு டிரம்ப் தம்பதியினர் வருகை தந்தனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் முப்படைகளின் அணிவகுப்புடன் கூடிய சிவப்பு கம்பள மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அமெரிக்கா, இந்தியாவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
முப்படை அணிவகுப்பு மரியாதை
இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். அப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை டிரம்ப்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அமெரிக்கா அதிகாரிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டிரம்ப் அறிமுகம் செய்து வைத்தார்.
காந்தி நினைவிடத்தில்..
இதன்பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது காந்தி நினைவிடத்தில் மரக்கன்று ஒன்றையும் டிரம்ப் தம்பதியினர் நட்டனர். பின்னர் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் தமது கருத்துகளை பதிவு செய்தார் டிரம்ப். அப்போது காந்தி சிலை, டிரம்ப்புக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பகல் 12 மணியளவில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சுமார் ரூ21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.
மேலும் டிரம்ப் மனைவி மெலானியா. டெல்லி நானக்புராவில் அரசு பள்ளிகளையும் பார்வையிடுகிறார். பின் இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டிரம்ப் சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்கும் டிரம்ப், இரவு 10 மணியளவில் அமெரிக்காவுக்கு திரும்புகிறார்.
டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் சிஏஏவை முன்வைத்து வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.