தனி விமானத்தில் புறப்பட்டார்.. அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை.. பயணம் குறித்து முழு விவரம்
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்புடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு நாளை வருகை தர உள்ளார். அவர் அஹமதாபாத், டெல்லி, மற்றும் ஆக்ரா (தாஜ்மஹால்) ஆகிய இடங்களுக்கு செல்கிறார். இதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து "ஏர் போர்ஸ் ஒன்" என்ற தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (இரவு) இந்தியாவுக்கு புறப்பட்டார். இந்தியாவுக்கு முதன்முறையாக நாளை வரும் டொனால்டு டிரம்ப் நாளை, நாளை மறுநாள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாளை பகல் 12.30க்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வரும் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்க உள்ளார். டிரம் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. டிரம்பும், மோடியும் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக செல்கிறார்கள். சாலையின் இருபுறம் பல்லாயிரம் மக்கள் நின்று கையசைத்து வரவேற்கிறார்கள்.
டிரம்ப் உரை
பேரணியை தொடர்ந்து இருவரும் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ‘மோதேரா மைதானத்தை' பார்வையிடுகிறார்கள். அங்கு நடைபெறும் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்ற உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல. கலை நிகழ்ச்சிகள் அப்போது நடைபெறுகிறது.
காந்திக்கு மரியாதை
பின்னர் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார். அங்கு தேசதந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். காந்தி நினைவாக நூல் ராட்டையும், புத்தகமும் டிரம்புக்கு மோடி பரிசாக வழங்குகிறார். எனினும் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்வது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. அப்படியே டிரம்பிற்கு மதிய உணவாக குஜராத் வகை உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக்ரா செல்கிறார்
உணவு இடைவேளைக்கு பின் அவர் அகமதாபாத்தில் இருந்து தாஜ்மகாலை பார்ப்பதற்காக விமானத்தில் ஆக்ரா செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் செல்லும் 13 கி.மீ. தூரத்துக்கு அவரை வரவேற்று விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. யமுனை ஆற்றங்கரையில் அற்புதமாக உள்ள காதல் சின்னமான தாஜ்மகாலில் டிரம்ப் மனைவியுடன் நேரம் செலவழிக்கிறார். டிரம்புக்காக யமுனை ஆற்றில் இருந்து மாசு கலந்த நீர் வெளியேற்றப்பட்டு புதிய நீர் நிரப்பபி வைத்திருக்கிறது அந்த மாநில அரசு.
ஜனாதிபதி விருந்து
பின்னர் ஆக்ராவில் இருந்து டிரம்ப் டெல்லி வருகிறார். அங்குள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் டிரம்ப் இரவு ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு 25-ந் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அதிபர் டிரம்ப் சந்திக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தி அரச மரம் நடுகிறார்.
அமெரிக்கா புறப்பாடு
பின்னர் டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரு நாடுகள் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்கிறார்கள். எனினும் இதுவரை எந்த ஒப்பந்தமும் இறுதி செய்வதற்கான நிலையில இல்லை. பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்கள். அதன்பின்னர் பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் டிரம்ப் கலந்து கொள்கிறார். இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் 36 மணி நேரம் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
குண்டு துளைக்காத காரில் டிரம்ப் பயணம் மேற்கொள்வார். அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல், போகும் பாதை ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்திருக்கிறது. ஒருவேளை டிரம்ப் வரும் போது அஹமதாபாத்தில் வானிலையில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் டிரம்ப் தரையிரங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே தனி விமானத்தில் டிரம்ப் புறப்பட்ட நிலையில், என் நண்பரை சந்திக்க ஆரவமாக உள்ளேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.