டிரம்ப் வலதுசாரி எனில் ஜோ பிடன் ஏகாதிபத்திய தேசத்தின் அதிபர்..இந்தியாவுக்கு என்ன சாதகம்? பாதகம்?
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றதில் இந்திய வலதுசாரி எதிர்ப்பாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் ஜோ பிடன் என்கிற ஏகாதிபத்திய தேசத்தின் அதிபரால் இந்தியாவின் தற்போதைய ஆட்சிக்கு பலவகைகளில் நெருக்கடிகளுக்கு அதிகம் சாத்தியம் இருக்கிறது என்பதையும் உணர வேன்டும்.
டொனால்ட் டிரம்ப் வென்ற போது உலகம் வலதுசாரிகள் வசமாகிறது என கூறி பலரும் பெருமிதப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் இந்த வலதுசாரிப் பெருமிதம் தூக்கலாகவே இருந்தது. இதனால் டிரம்ப்புடனான இந்திய அரசின் மேம்பட்டதாக இருந்தது.
அமெரிக்காவில் குடியேறி மேல்தட்டு வர்க்கமான உருவான இந்தியர்களில் பலருக்கு ஆதர்சன நாயகனாகவும் திகழ்ந்தார் டிரம்ப். இதனால் இருநாட்டு தலைவர்களிடையே கடந்த காலங்களைவிட நெருக்கம் இருந்தது. ஹவ்டி மோடி... நமஸ்தே டிரம்ப் போன்றவை எல்லாம் இருநாடுகள் உறவின் உச்சம். இதை உன்னதமானது என்பார்கள் வலதுசாரிகள்.
கொண்டாடும் அரசியல் கட்சிகள்
இப்போது டொனால்ட் டிரம்ப் வீழ்த்தப்பட்டிருப்பதை இந்தியாவில் பாஜக அல்லாத அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. இவர்கள் அனைவரும் இடதுசாரிகளும் அல்ல. சிவசேனா போன்ற வலதுசாரிகளும் மாநில கட்சிகளும் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்த அளவுக்குதான் டிரம்ப் அல்லது வலதுசாரி அல்லது பாஜக எதிர்ப்பாளர்கள் கொண்டாடிக் கொள்ள முடியும். ஏனெனில் எப்போதும் ஜோபிடன் ஏகாதிபத்திய தேசத்தின் அதிபர் என்பதையும் அதை நிலைநாட்டுவதில் பிடன் உறுதியாக நிற்பார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
காஷ்மீர்- பிடன்
நம்மைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். இதில் எந்த ஒரு மூன்றாம் நாட்டின் தலையீட்டையும் நாம் அனுமதிப்பது இல்லை. ஆனால் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி சக்திகள், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச சமூகத்தில் நம்மை அவமானப்படுத்துவதில் குறியாக இருக்கின்றன. இந்த எதிரி சக்திகளுக்கு ஊக்கம் தரும் வகையில் அதே ஜம்மு காஷ்மீரின் மனித உரிமைகள் விவகாரத்தை பேசியவர் ஜோ பிடன் என்பதை மறுக்க முடியாது.
சிஏஏவுக்கு எதிர்ப்பு
மத்திய அரசின் குடியேற்ற திருத்த சட்டத்தை (சிஏஏ) இந்திய கட்சிகள், ஜனநாயக சக்திகள் எதிர்த்து வீதிக்கு வீதி போராட்டம் நடத்தின. இது இந்திய தேசத்தின் உள்விவகாரம். இதில் அமெரிக்கா மூக்கை நுழைத்துவிட முடியாது. ஆனால் அப்படி மூக்கை நுழைத்து கருத்து சொன்னவரும் ஜோ பிடன்தான். இப்படியான அம்சங்களுக்கு இடையே ஆறுதலான சில பக்கங்களையும் ஜோ பிடனிடம் பார்க்கலாம்.
சீனாவுக்கு எதிர்ப்பு
சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தவர் ஜோ பிடன். பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க விரும்பினார். ஆனால் ஜோ பிடன், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஒரு நம்பகத்தன்மையற்ற கூட்டாளி என்கிற கருத்தை பகிரங்கமாக முன்வைத்தவர். இருந்தபோதும் சீனாவிடம் டிரம்ப் காட்டிய கடும் போக்கை அப்படி எல்லாம் ஜோ பிடன் வெளிப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்க முடியாது.
பிடனால் சாதகம்
அதேநேரத்தில் டிரம்ப் காட்டிய விசா கெடுபிடிகள், குடியேற்ற விவகாரங்கள், இந்தியர்கள் வேலை பறிப்பு போன்ற அடாவடிகளில் நிச்சயம் ஜோ பிடன் ஆட்சிக் காலத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும். அதேபோல் பருவ நிலை மாற்றம், காற்று மாசுபாட்டுக்கு இந்தியாவை அநியாயத்துக்கு விமர்சித்தவர் டிரம்ப். ஆனால் இந்தியாவுடன் இணைந்து இந்த விவகாரங்களில் ஜோ பிடன் செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது. இத்தனை இருந்தாலும் அமெரிக்கா எனும் ஏகாதிபத்தியன் நலன் ஜோ பிடனின் நகர்வுகள் நிச்சயம் இல்லாமல் போகாது என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் தேவை.