பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கு அழைப்பு?
டெல்லி: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 30ந் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி ஏற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட இருக்கின்றன. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட இங்கிலாந்து, பிரான்ஸ் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாம்.
நான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!
இதுதவிர்த்து, ஜப்பான், இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் சார்க் கூட்டமைப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர், அடுத்த சில நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.
அதிமுகவின் ஒரே எம்பி.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி?
பதவி விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உலக அரங்கில் தன்னை வலுவான தலைவராக முன்னிறுத்தவும், பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பாகவும் பிரதமர் மோடி கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.