அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்!
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளிநாடுகளுடான உறவை வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அண்மையில் மாலத்தீவு, இலங்கை, கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கிர்கிஸ்தான் சென்றபோது, சீன அதிபர் ஜிங்பிங் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இது ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது.
பிற நாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வரும் 25ந் தேதி முதல் 27ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த சுற்றுப் பயணத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. மேலும், இந்திய பொருட்கள் மீது கடுமையான வரி விதிப்பு முறைகளை அமலுக்கு கொண்டு வருவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் வருகை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் நடக்க இருக்கும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.