யு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை!
டெல்லி: அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இதனால் சீனாவுக்கு எதிரான கடும் போக்கை கடைபிடிக்கும் டொனால்ட் டிரம்புக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்!
பிரசாரத்தில் சீனா சார்பு
அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பொறுத்தவரை தம்மை சீனா எதிர்ப்பாளராகவும் ஜோ பிடனை சீனா ஆதரவாளராகவும் முன்னிறுத்தும் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. ஜோபிடன் அதிபரானால், அவர் சீனாவுக்கு சாதகமாகவே முடிவெடுப்பார்; இந்தியாவ்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றெல்லாம் பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.
இந்தியா-யுஎஸ் அமைச்சர்கள் ஆலோசனை
இந்த பின்னணியில் இந்தியா, அமெரிக்கா இடையே இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 3-வது ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் அக்டோபர் 26,27 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
சீனா ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம்
அமெரிக்கா அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பருடன் இந்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் சீனாவுடனான எல்லை பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
பசிபிக் பிராந்திய பாதுகாப்பு
எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவுக்கு விளக்கப்படவும் இருக்கிறது. பசிபிக் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாகவும் சீனாவை இந்த பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் வியூகம் தொடர்பாகவும் இருநாட்டு அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தும். அதேபோல் இருநாடுகளும் தங்களிடையேயான மிக முக்கிய புலனாய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்ள இருக்கின்றனர். இதற்கு முன்னர் 2018, 2019-ல் இந்தியா, அமெரிக்கா இடையே இது போன்ற ஆலோசனை மாநாடுகள் நடைபெற்றும் உள்ளன.