அமெரிக்கா அதிரடி.. பொருளாதாரத்தை சரி செய்ய 1.48 'கோடி கோடி' ரூபாய் மதிப்புக்கு பணத்தை இறைக்கிறது
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தை குறைப்பதற்கான ஒரு பொருளாதார ஊக்க மசோதாவை தாக்கல் செய்வது, குறித்து அமெரிக்க செனட்டர்களும், டொனால்ட் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளும், உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் யூலாண்ட் தெரிவித்துள்ளார்.
பல நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது. இதன் மதிப்பு, 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 டிரில்லியன் டாலர் என்பது, 2,000,000,000,000 எனவும் பொருள் கொள்ளலாம். இந்திய ரூபாய் கணக்குப்படி பார்த்தால், நமது இந்திய ரூபாய் மதிப்பில், 1.48 'கோடி கோடி' ரூபாய் பணத்தை பொருளாதாரத்தை வேகம்பிடிக்க வைக்க வாரி இறைக்கப்போகிறது.
செனட்டின் குடியரசுக் கட்சி, மெஜாரிட்டி தலைவர் மிட்ச் மெக்கானெல், இந்த மசோதா பற்றி, விரைவில் செனட்டில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்திய பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 15 ஆயிரம் கோடியை கொரோனா பாதிப்பு பிரச்சினையை சரி செய்வதற்கு ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
யாருக்கு எத்தனை பில்லியன்
இந்த பேக்கேஜில் நிவுற்ற தொழில்களுக்கு உதவ 500 பில்லியன் டாலர் நிதியும், மில்லியன் கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு 3,000 டாலர் வரை நேரடியாக வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்துவதற்கான தொகையும், சிறு வணிக கடன்களுக்கு 350 பில்லியன் டாலர்களும், வேலையின்மை பிரச்சினையை சமாளிக்க 250 பில்லியன் டாலர்கள் வழங்குவதும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 75 பில்லியன் டாலர்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா நிலவரம்
அமெரிக்காவில் 700க்கும் மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் நோய் கொன்றுள்ளது. 50,000க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் தங்கள் பணிகளை நிறுத்தியுள்ளன. 100 மில்லியன் மக்கள், அதாவது, கிட்டத்தட்ட, அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வீட்டுக்குள்ளயே தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்கள்.
பெரிய நிதி
பொருளாதார ஊக்க சட்டத்தில் குறிப்பிடப்பட உள்ள பணத்தின் மதிப்பு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு, விஞ்ஞான ஆராய்ச்சி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பிற திட்டங்களுக்கு செலவழிப்பதை விட அதிகமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில், நிலைமை இப்படியே நீடித்தால், பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று எச்சரித்த நிலையில், இவ்வளவு அதிக தொகையை, வாரி இறைக்கிறது, அமெரிக்க அரசு.
இன்னும் பேக்கேஜ் அறிவிப்பு வரவில்லை
அதேநேரம், இந்திய அரசு இன்னும் பொருளாதார பேக்கேஜ் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை. 4 மணி நேரத்தில் இந்த முடிவை எடுக்க முடியும். ஆனால் இத்தனை நாட்களாக அதை செய்யவில்லை. எத்தனையோ, ஏழை, எளியவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட சமீபத்தில் ஆதங்கம் தெரிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.