தீவிரவாதத்திற்கு பதிலடி.. இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு
Recommended Video
டெல்லி: எல்லை தாண்டிய, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று, அந்த நாட்டு பாதுகாப்பு துறை ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ஜான் போல்டன்.
இந்த ஆலோசனையின் போது, தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சுய பாதுகாப்பு
தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக நான் அஜித் தோவலிடம் தொலைபேசியில் இருமுறை பேசியுள்ளேன். அமெரிக்காவின் இரங்கலையும் அப்போது அவரிடம் நான் தெரிவித்துக் கொண்டேன், என்று ஜான் போல்டன் கூறியுள்ளார்.
|
பாகிஸ்தான் பங்கு
ஜான் போல்டன் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும், என்பதில் அமெரிக்கா மிகவும் தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானிடம் ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அச்சுறுத்தலாகிறது
முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செயலாளர் மைக் போம்பியோ, டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது, என்று கடுமையான வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார்.
|
இந்தியாவின் வெற்றி
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படக்கூடிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாடுகளில் இருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்தும், முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம், புல்வாமா தாக்குதலின் பின்னணி பற்றி இந்தியா விளக்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் ஆதரவு என்பது முக்கியமான மைல்கல் ஆகும்.