டெல்லி கலவரம்.. "யூஸ்லெஸ் பேப்பர்.." "ஒரு விவரமும் இல்லை.." காவல்துறையை கடுமையாக விளாசிய ஹைகோர்ட்
டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில், காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை, 'யூஸ்லெஸ் பேப்பர்' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒரு தரப்பும், ஆதரித்து ஒரு தரப்பும் மோதிக் கொண்டதால், கடந்த வருடம் ஆரம்பத்தில் டெல்லி கலவர பூமியாக மாறியது.
இந்த கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். இந்த கலவர வழக்கில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா கைது செய்யப்பட்டிருந்தார்.
மாணவர் கைது
24 வயதான ஆசிப் இக்பால் தன்ஹா காவல்துறைக்கு, தான் அளித்த வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டதும் என்றும் இதன் மூலம் தான் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரம், நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படாத மற்றும் ஆதாரமாக கருத முடியாத வாக்குமூலம் இது என்றும் குறிப்பிட்டார்.
லீக் செய்யவில்லை
இந்த மனுவையடுத்து, நீதிமன்றம் டெல்லி காவல்துறை மற்றும் செய்தி சேனலிடம் பதில் தர கோரியது. பதிலளித்த காவல்துறையினர், தங்களுக்கு இக்பால் வழங்கிய வாக்குமூலம் பற்றிய அறிக்கையை மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் மட்டுமே பகிர்ந்து கொண்டதாகவும், ஊடகத்துடன் பகிரவில்லை என்றும் கூறினர்.
யார் கொண்டு போனா சொல்லுங்க
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முக்தா குப்தா, போலீசின் விசாரணை அறிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த விஷயத்தில் விசாரணை எங்கே நடந்தது? யார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை கொண்டு சென்றார்கள்? யார் மாநில அரசுக்கு அறிக்கையை கொண்டு சென்றது? எந்த விவரமும் இந்த அறிக்கையில் இல்லை. இந்த அறிக்கை தகவல் இல்லாத யூஸ்லெஸ் பேப்பர். அரை வேக்காட்டுத்தனமானது. இது கூரியரில் அனுப்ப கூடிய கேஸ் ஃபைல் கிடையாது. கைகளுக்குள் வைத்து பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டியது.
கண்டுபிடிங்க
விஜிலென்ஸ் விசாரணை அறிக்கையில், இக்பாலிடம் செய்த விசாரணை மீடியாவுக்கு கசிய விடப்பட்டது தொடர்பான, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. மீடியாவில் செய்தி வந்துள்ளது. ஆனால் யார் அதைச் செய்தார்கள் என்பதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கண்டித்தார்.
டெல்லி கலவரம்
மாணவர் இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினரான இக்பால் தன்ஹா, புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்தார் என்று போலீசார் முன்பு கூறியிருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர் மே மாதம் கைது செய்யப்பட்டார்.