ஒரே ஒரு போன் கால்.. அரசியலையே மாற்றியது.. ராகுல் காந்தியின் கூட்டணி கனவில் விளையாடிய ஈகோ பிரச்சனை!
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கூட்டணி கணக்கில் ஒரே ஒரு போன் கால் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக ஒரு போன் காலை எடுக்காமல் போனால் காதல்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது, காதலர்கள் பிரிய வாய்ப்புள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அது பெரிய தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மிகப்பெரிய தேர்தல் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தில் இருந்தது. மெகா கூட்டணியை உருவாக்கி பாஜகவை சந்திக்கும் எண்ணத்தில் இருந்தது. ஆனால் அது பல மாநிலங்களில் நிறைவேறாமல் போய் இருக்கிறது.
ஆனால் என்ன
காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருந்தது. பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டணி உருவாகாமல் போனது இதற்கு பின் பல காரணங்கள் இருக்கிறது. இரண்டு முக்கிய இளம் அரசியல்வாதிகளுக்கு இடையிலான ஈகோதான் இதற்கு காரணம்.
இடைத்தேர்தல்
கடந்த 2018 மார்ச் மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற காரணத்தால் அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கோராக்பூர் தொகுதி காலியானது,. அதேபோல் கேசவ்பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்றத்தால் பஹல்பூர் நாடாளுமன்ற தொகுதி காலியானது.
என்ன கூட்டணி
இந்த இரண்டிலும் கூட்டணி வைத்து போட்டியிட பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டது. ஆனால் அங்குதான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சறுக்கி இருக்கிறார். இரண்டு தொகுதியில் ஒன்றில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஆசைப்பட்டு இருக்கிறது. ஆனால் இரண்டிலும் காங்கிரஸ் கட்சி அத்தனை வலுவான கட்சி கிடையாது. ஆனால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் மிக தீவிரமாக இருந்துள்ளது.
ஒருமுறை கூட பேசவில்லை
காங்கிரஸ் கேட்ட ஒரு தொகுதியை சமாஜ்வாதி கொடுக்க மறுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை சமாதானம் செய்ய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிகம் முயன்று இருக்கிறார். ஆனால் அவர் செய்த ஒரு போன் காலை கூட ராகுல் காந்தி எடுக்கவில்லை. அகிலேஷ் யாதவ் பல முறை கால் செய்தும் ராகுல் காந்தி போனை எடுக்கவில்லை. இப்படி ராகுல் காந்தி காலம் தாழ்த்திக் கொண்டே சென்றுள்ளார்.
கோபமும் அடைந்தார்
இதனால் கோபம் அடைந்த அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார். இதனால் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு தொகுதியிலும் இந்த கூட்டணிதான் வெற்றிபெற்றது. காங்கிரஸ், பாஜக இரண்டிலும் தோல்வி அடைந்தது.
என்ன செய்தார்
ஆனால் தேர்தல் நடந்த சமயத்தில் ராகுல் காந்தி பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு எதிராக மிகவும் வலிமையான நபர்களை நிறுத்தினார். இரண்டும் பிராமணர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் அதே வேட்பாளர்களை நிறுத்தி பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு பிரச்சனை கொடுத்தார். இது பாஜகவிற்கு ஒரு வகையில் உதவியாக இருந்தது.
கோபத்திற்கு காரணம்
இந்த நிலையில் இது எல்லாம் சேர்த்து அகிலேஷ் யாதவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி இடையே பிரச்சனை ஏற்பட்டு, பனிப்போர் நிலவ தொடங்கியது. தற்போதும் அந்த பனிப்போர் பிரச்சனை நீடித்து வருகிறது.
இப்போதும் இல்லை
இதன்பின் லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ராகுல் காந்தி செய்த போன் கால்களை அகிலேஷ் யாதவ் எடுக்காமல் இருந்துள்ளார். அகிலேஷ் யாதவ் தொடர்ந்து ராகுல் காந்தியை அலையவிட்டு உள்ளார். கடைசியில் இரண்டு இடங்கள் மட்டுமே கொடுப்போம் என்று கூறி காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தி இருக்கிறார்.
கடைசியில் நடக்கவில்லை
இதனால்தான் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் இணையவில்லை என்கிறார்கள். ஒருவேளை இவர்கள் மூவரும் இணைந்தால் உத்தர பிரதேசத்தில் பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே வெல்லும், மீதமுள்ள 78 இடங்களை இந்த கூட்டணிதான் வெல்லும் என்றார்கள். ஆனால் போன் எடுக்காமல் வந்த ஈகோ பிரச்சனை காரணமாக மொத்தமாக இந்த கூட்டணி கனவே தகர்ந்து இருக்கிறது.