50 வயது பெண்.. பூசாரி உட்பட 3 பேர் சேர்ந்து நடுங்க வைத்த கூட்டு பலாத்காரம்.. மெத்தனமாக இருந்த போலீஸ்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் 50 வயதாகும் பெண் ஒருவர், பூசாரி உள்ளிட்ட மூன்று பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் மிகவும் தாமதமாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சில மாதங்கள் முன்பு நாடு முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் வடு ஆறும் முன்பாக அம்மாநிலத்தின் படான் மாவட்டத்தில் 50 வயதாகும் அங்கன்வாடி பெண் பணியாளர் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
"பணம் வசூல்" பண்ணாதீங்க.. நோகடிக்காதீங்க.. ரஜினி மக்கள் மன்றம் திடீர் அறிக்கை
உடலை போட்டுவிட்டு ஓடிய கும்பல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது குடும்பத்தார் ஓடிச் சென்று போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகாரை வாங்க மறுத்த போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், மூன்று பேர் அந்தப் பெண்ணின் வீட்டு கதவை தட்டி விட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அந்த பெண்ணை ஏற்கனவே உயிரிழந்து போயிருந்தது தெரிய வந்தது. உடலை போட்டுவிட்டு ஓடியது, கோவில் பூசாரி, அவர் உதவியாளர், டிரைவர் ஆகியோர் என்று பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகிறார்கள்.
போலீசார் அலைக்கழிப்பு
உடனடியாக, புகார் அளிக்க உகைதி காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், ஸ்டேஷன் இன்சார்ஜ் ரவேந்திர பிரதாப் சிங், அவர்கள் சொல்வதைக் கேட்க மறுத்து, மறுநாள் இந்த விஷயத்தை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். போலீசார் திங்கள்கிழமை காலைதான், பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
18 மணி நேரம் தாமதம்
இதையடுத்து சுமார் 18 மணி நேரம் கழித்து தான் அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில் 50 வயது பெண்ணின் பிறப்பு உறுப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது, நிறைய ரத்தம் வெளியேறி உள்ளது, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலும், பெண்ணின் குடும்பத்தார் கூறிய வாக்குமூலம் அடிப்படையிலும், கோவில் பூசாரி, அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூசாரி இன்னமும் தலைமறைவாகி உள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம்
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறது. உத்தரபிரதேச காவல்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்களது உறுப்பினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணை நடத்தவுள்ளதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரியங்கா குற்றச்சாட்டு
இதனிடையே, பெண்கள் பாதுகாப்பில் யோகி ஆதித்யநாத் அரசு மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றிய அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பலாத்காரம் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் குரலை அரசு நிர்வாகம் செவிமடுக்கவில்லை. படான் மாவட்டத்திலும், போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை அலைக்கழித்து புகாரை வாங்காமல் இருந்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பில் உத்தரபிரதேச மாநில அரசு செயல்படும் விதம் இதுதான். இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.