கெஞ்சிய பெற்றோர்.. கண்டுகொள்ளாத போலீஸ்.. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம்.. உ.பி. ஷாக்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட 20 வயது பெண் மரணம் அடைந்தார். ஆனால் அவரது குடும்பத்தாருக்கு கூட சொல்லாமல் உடலை எடுத்துச்சென்று காவல்துறையினர் தகனம் செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயது தலித் பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு பெரும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்ப்டட சம்பவத்துக்கு ஈடான கொடுமை இது.
பவித்ரா உறவினருடன் ஒன்றாக இருந்தார்.. மனைவி, மாமியாரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர் பரபர வாக்குமூலம்
பெரும் அதிர்ச்சி
உயிருக்கு போராடிய நிலையில், அந்த பெண், ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பிறகு, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாதர் சங்கங்கள் கொதித்து எழுந்தன.
|
பெண்கள் அமைப்பு போராட்டம்
உத்திரபிரதேச மாநிலத்தில், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று வெளியான புள்ளிவிவரங்களை சுட்டிக் காட்டி, இந்த சம்பவத்தையும் கண்டித்து, மாதர் சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்கள் டிரெண்ட் செய்யப்பட்டன.
இரவோடு இரவாக
இது ஒரு பக்கம் என்றால்.. பலாத்காரத்திற்கு ஆளாகி தனது மகளை இழந்த அந்த குடும்பம் நேற்றிரவு மீண்டும் மாபெரும் அதிர்ச்சியை சந்தித்தது. டெல்லியிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஹத்ராஸ் கிராமம். எனவே, 20 வயதுப் பெண்ணின் உடல் நேற்று இரவே, அங்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து உடனடியாக இரவோடு இரவாக அந்த பெண் சடலத்துக்கு எரியூட்ட வேண்டும் என்று காவல்துறை வற்புறுத்தியது. இதற்கு பெண்ணின் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை.
கெஞ்சிய பெற்றோர்
அந்த பெண்ணின் தந்தை, தாய் போன்றவர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சினர். தயவுசெய்து இந்து முறைப்படி, தகனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். ஆனால் இதற்கு காவல்துறை சம்மதிக்கவில்லை. இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஊருக்கு வெளியே அந்த இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது.
பெண் உடல் தகனம்
உடலுக்கு அருகே செல்வதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு கூட காவல்துறை அனுமதி வழங்கவில்லை. மீடியா நிருபர்களும் தடுக்கப்பட்டனர். முன்னதாக, பெண்ணின் உடலை கொண்டு சென்றபோது மாதர் சங்கத்தின் பிரதிநிதிகளும், ஊர் பொதுமக்களும், குடும்பத்தினரும் அந்த வாகனத்திற்கு முன்பாக நின்று தங்கள் விருப்பப்படி தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். ஆயினும் காவல்துறை அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் முன்பாக கதறல்
பெண்ணின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் முன்பாக, அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் நின்று, தங்கள் வீட்டுக்கு உடலை கொண்டு செல்லுங்கள் என கதறியுள்ளனர். ஆனால் போலீஸ் இதற்கு சம்மதிக்காமல் பெற்றோரை இறுதி சடங்கிற்கு அனுமதிக்காமல் ஊருக்கு வெளியே கொண்டு சென்று உடலை எரித்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தார் கெஞ்சி கதறிய போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மறுக்கும் கலெக்டர்
இவ்வாறு நடைபெற்ற அனைத்திற்கும் புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், பெண்ணின் குடும்பத்தின் அனுமதியின்றி இறுதி சடங்கு நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. இரவில் இறுதிச் சடங்குகளை நடத்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் ஒப்புதல் அளித்தனர். இறுதி சடங்கில் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பெண்ணின் உடலை ஏற்றி வந்த வாகனம், அவர் கிராமத்தில் காலை 12:45 மணி முதல் 2:30 மணி வரை இருந்தது. அதன்பிறகுதான், தகனம் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார். ஆனால் இரவோடு இரவாக பெண் உடலை தகனம் செய்ய தேவை என்ன வந்தது? என்ற கேள்விக்கு விடையில்லை.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
இந்த சம்பவங்கள் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ஹத்ராஸ் சம்பவத்தின் குற்றவாளிகளை விட மாட்டோம். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் அந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும். விரைவான நீதியை உறுதி செய்ய, இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். பலாத்கார சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் தொலைபேசியில் பேசினார், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இவ்வாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.