மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா பொது சிவில் சட்டம்? முஸ்லிம் தனிநபர் வாரியம் கடும் எதிர்ப்பு!
பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் தனிநபர் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசானது தமது சித்தாந்த ரீதியான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370-வது அரசியல் சாசனப் பிரிவை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இந்த வரிசையில் அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது மத்திய அரசு என்பது எதிர்க்கட்சிகளின் புகார்.
கடந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் பாஜக எம்.பி கிரோடி லால் மீனா என்பவர் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற கோரும் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது ஒரே மாதிரியான சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என திமுக எம்பி திருச்சி சிவா கடுமையாக எதிர்த்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி, நாம் நாட்டை பேரழிவை நோக்கி சிதைவை நோக்கி இட்டுச்செல்கிறோம். இந்த நாள் ஒரு அவமானமான துயரமான நாளாகும் என கொந்தளித்தார். மேலும் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது அப்போது மசோதாவுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்ததால் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனமானது விருப்பமான மதத்தைப் பின்பற்ற ஒருவருக்கு அனுமதி கொடுத்துள்ளது. பொது சிவில் சட்டமோ இதற்கு எதிரானது. ஆகையால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தி உள்ளது.
பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தியதே அம்பேத்கர்தான்.. திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி