1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு! என்ன நடக்கிறது உ.பி.யில்?
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள், விஷயத்தில் உத்தரப் பிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அந்த மாநில அரசு நடுவே கடும் வார்த்தை யுத்தம் தொடங்கி உள்ளது. இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது.
நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற மோசமான நிலைமைக்கு, மத்திய, மோடி அரசு எடுத்த திடீர் நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்தான் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
சமீபத்தில், டெல்லியில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆசுவாசப்படுத்தி, ஆறுதல்கூறி அவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்.
தடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு
பிரியங்கா காந்தி கடிதம்
இந்த நிலையில்தான், பிரியங்கா காந்தியின் அலுவலகம் சார்பில் உத்தரபிரதேச மாநில, யோகி ஆதித்யநாத் அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்காக, 1000 பஸ் வசதி ஏற்படுத்தி தர உள்ளதாகவும், அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வடிவில் ஒரு மெசேஜ் வெளியிட்டு இருந்தார்.
|
தலைநகருக்கு பஸ்கள்
முதலில் இந்த விஷயத்திற்கு உடன்படாத மாநில அரசு, பிறகு பிரியங்கா காந்தி கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்திற்கு வெளியே உள்ள அந்த ஆயிரம் பஸ்களும், தலைநகர் லக்னோ வரவேண்டும், அங்கிருந்து தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்தது. ஆனால் இதற்கு பிரியங்காகாந்தி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
வீண் செலவு
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், வீணாக காலி பஸ்களை, எல்லையிலிருந்து, லக்னோ வரை இயக்கி, தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வீண் செலவு மற்றும் நேர விரயம் என்று பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து ஓரளவுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய உத்தரபிரதேச மாநிலத்தின் தொழில் நகரங்களான நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு, தலா 500 பஸ்களை அனுப்பி வையுங்கள் என்று அரசு தரப்பு கூறியது. அதற்கு முன்பாக, பஸ்கள் தொடர்பான விவரம், நடத்துனர் மற்றும் டிரைவர் தொடர்பான விவரம் அரசிடம் தரப்பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர்கள் சரி பார்ப்பார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆட்டோ, டூவீலர் எண்
இதை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரசுக்கு, பஸ்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர், சித்தார்த் நாத் சிங் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சி அனுப்பிய பட்டியலில் இருக்கக்கூடிய பதிவு எண்களை வைத்து பார்த்த போது அதில் பல இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் நம்பர் என்று தெரிய வந்துள்ளது. பஸ்களை ஏற்பாடு செய்யாமல் போலியாக விளம்பரத்திற்காக காங்கிரஸ் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது, இதன் மூலம் அம்பலமாகி விட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. அரசியல் செய்வதில் ஆர்வம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மக்கள் பாவம்
இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது .உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் லல்லு இதுபற்றித் தெரிவிக்கையில், மக்களுக்கு தவறான தகவலை அளிக்கிறது ஆளும் பாஜக அரசு. தவறான வாகன பதிவு எண்களை வெளியிட்டு காங்கிரஸ் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் காப்பாற்றா விட்டாலும் பரவாயில்லை. உதவி செய்ய வருபவர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். யார் பக்கம் நியாயம் யார் பக்கம் தவறு என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போய் கிடக்கிறார்கள். ஒருபக்கம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை அழைத்துச் செல்ல வாகனம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.