உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்ட தபோவன் அணை
டெல்லி: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு காரணமாக, தபோவன் அணையிலுள்ள விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தெளிவாகத் தெரிகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள பனிப்பாறைகளில் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததால், அங்குள்ள தவுலிகங்கா மற்றும் ரிஷிகங்கா ஆறுகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
தற்போது வரை உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அடித்துச் செல்லப்பட்ட அணை
தவுலிகங்கா மற்றும் ரிஷிகங்கா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்த தபோவன் அணை முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. அதேபோல மலரி பள்ளத்தாக்கின் அருகிலிருந்த இரண்டு பாலங்களும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமான பணிகளும் அங்கிருந்த குடிசைகளும் சேதமடைந்துள்ளன.
நீர்மின் நிலைய கட்டுமான பணிகள்
மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் சார்பில் தபோவன் அணையின் குறுக்கே 520 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த வெள்ளப் பெருக்கில் அந்த நீர்மின் நிலைய கட்டுமானமும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
170 பேர் காணவில்லை
இதன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 170 பேர் காணவில்லை என்றும் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படும் சூழ்நிலையில் மலைகளின் நடுவே மின் திட்டங்களை மேற்கொள்ளும் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் அழைப்பு விடுத்ததுள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரம்
மீட்புப்பணிகளை மேற்கொள்ளத் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல இந்தோ திபத் போலீஸ் படையும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1070 or 9557444486 என்ற உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.