உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்... காங் டஃப் ஃபைட் கொடுக்கும்: Republic TV சர்வே
டெல்லி: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியும் கணிசமான இடங்களைப் பெற்று கடும் போட்டியைத் தரும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.: பாஜகவிற்கு 235 தொகுதிகள்.. சமாஜ்வாதிக்கு 165 சீட் கிடைக்கலாம்! இந்தியா டிவி கருத்துக்கணிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் 3-வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவி வகித்து வருகிறார்.
பாஜகவில் குழப்பம்
உத்தரகாண்ட் பாஜகவில் உட்கட்சி பூசல் கொடிகட்டிப் பறக்கிறது. இதனாலேயே அடுத்தடுத்து மாநில முதல்வர்களை மாற்ற வேண்டிய நெருக்கடி பாஜக மேலிடத்துக்கு ஏற்பட்டது. பாஜகவின் உட்கட்சிப் பூசல்களால் ஆட்சியை அக்கட்சி இழக்கும் என கணிக்கிறது காங்கிரஸ். அண்மையில் அமைச்சர் ஹராக் சிங் ராவத் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பாஜகவில் மருமகளுக்கு சீட் கேட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் கலகக் குரல் எழுப்பினார். இதனையடுத்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அவர் காங்கிரஸில் சேர உள்ளார்.
காங். கலகக் குரல்
ஆனால் காங்கிரஸ் கட்சியில் பாஜகவைவிட மிக மோசமாக உட்கட்சி பூசல் வெடித்திருக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரி அண்மையில் கலகக் குரல் எழுப்பி இருந்தார். இந்த நிலையில் உ.பி.யில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
பாஜக அதிக இடங்கள்
Republic TV-PMARQ இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் உத்தரகாண்ட் நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாஜக 36 முதல் 42 இடங்களைக் கைப்பற்றும்; காங்கிரஸ் 25 முதல் 31 இடங்களில் வெல்லுமாம். ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகபட்சம் 2 இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு. இதர கட்சிகளுக்கு 1 முதல் 3 இடங்கள் கிடைக்குமாம்.
பாஜக- காங். வாக்கு சதவீதம்
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு 39.9%; காங்கிரஸுக்கு 37.5%; ஆம் ஆத்மி கட்சிக்கு 13.1% வாக்குகள் கிடைக்கும். இவ்வாறு Republic TV-PMARQ கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அனைத்து இடங்களுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.