தடுப்பூசி வியூகத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு.. பொருளாதாரத்தையும் பார்க்கனும்.. இப்படி செய்யலாமே!
டெல்லி: இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும், ஜான்சன் அன்டு ஜான்சன் நிறுவனத்தின் ஒரே டோஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்வதிலும் மத்திய அரசு நடவடிக்கையை துவங்க வேண்டியது அவசியமாகும்.
நிதி ஆயோக் சமீபத்தில் நடத்திய ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பற்றாக்குறையாக இருக்கிறது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இன்னும் பல மாதங்கள் பிடிக்கக் கூடும் என்று அதில் எச்சரிக்கப்பட்டது. அதேநேரம் நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தக்கூடிய செயல் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அதில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய திட்டத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதன் பிறகு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மாதம் தொடக்கம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.
கண்டிப்பாக இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக முதியவர்களுக்கு, அதிகமான பாதிப்புகள் ஏற்படும். அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேநேரம் இளைஞர்கள்தான் அதிக அளவுக்கு வெளியே சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் நோய்க்கிருமியை பலருக்கும் தெரியாமல் பரப்பும் வாய்ப்பு இருக்கிறது. இதை தடுப்பூசி போடும்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்பது நிதி ஆயோக் பரிந்துரையாக இருக்கிறது.
வேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி மொத்த பாதிப்பில் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட நபர்கள் பங்கு 40% பேராக உள்ளது.
அதில், 17% இழப்புகள் பதிவாகின்றன. அதேநேரம் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது 30 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. கொரோனா உயிரிழப்புகளில் 80 சதவீதத்திற்கும் மேல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிகழ்கின்றன.
வெளியே சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆட்டோ, கார் டிரைவர்கள், வீடுகளுக்கு ஹோம் டெலிவரி செய்யக்கூடிய வேலையில் இருப்பவர்கள், காவலர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி பெறுவதில் முன்னுரிமை கொடுத்தால் இந்த நோய் பரவலை குறைக்க முடியும்.
தொற்றுநோயின் இரண்டாவது அலை முதல் அலையை விட புவியியல் ரீதியாக மாறுபட்டுள்ளது. முதல் 75% கேஸ்களுக்கு காரணமான மாவட்டங்களின் எண்ணிக்கை 60-100 ஆக இருந்தது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பாதிப்பு அதிகமோ, அங்கு தடுப்பூசி போடும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அதிகரிக்கலாம்.
கொரோனா வேக்சின் "பேட்டன்டை" இந்தியாவிடம் தர முடியாது.. பில்கேட்ஸ் பரபரப்பு.. ஏன் இப்படி பேசினார்?
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் அரசால் விதிக்கப்பட்ட கடுமையான லாக்டவுனின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவேதான் லாக்டவுன் என்றால் மக்கள் மத்தியில் இப்போதும் அச்சம் இருக்கிறது.
ஆதார் பயன்படுத்தி வயதை எளிதாக சரிபார்க்க முடியும். தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிப்பதற்கான மற்றொரு எளிய வழி, தடுப்பூசிக்கு நியாயமான கட்டணம் வசூலிப்பது.
ஒரே ஒரு ஷாட் தேவைப்படும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான ஒரு திட்டத்தை மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். இதன் மூலம், தடுப்பூசி போடப்பட்ட மக்களை அதிகரிக்க முடியும். இதனால் நாடு இயல்பாக தனது பொருளாதார நடவடிக்கைகளை தொடர முடியும்.