கொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி தடுப்பூசி.. சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அமைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவரசக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்கள்,முன்களப் பணியாளர்கள் என மூன்று கோடி பேருக்கு முதல்கட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 78,68,42 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சவப்பெட்டியின் கடைசி ஆணி
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கொரோனாவின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அமைந்துள்ளது. இருப்பினும், சிலர் அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இது மத்திய அரசுக்கு வேதனை அளிக்கிறது.
தயக்கம் தேவையில்லை
இவர்கள் செய்யும் இந்த செயல்கள் காரணமாக சமூகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்குத் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம் ஏற்படுகிறது. இப்படி தயக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, அதன் பின்னர் பிரச்னைகளை சந்திக்க அரசு விரும்பவில்லை. நமது மருத்துவர்களைப் போலவே அனைவருக்கும் கொரோனா தொற்றிலிருந்து உரியப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
பக்கவிளைவுகள் இயல்பு
நமது கொரோனா தடுப்பூசி மிக மிகப் பாதுகாப்பானது. இதில் மக்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் தலைவலி போல சில பக்க விளைவுகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். இது மிகவும் இயல்பான ஒன்று. எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் இது போன்ற பக்கவிளைவுகள் நிச்சயம் ஏற்படும்" என்றார்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பிரதமர்
முதல்கட்டமாக மூன்று கோடி பேருக்குத் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர், அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்கள், குறைவான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள், மருத்துவ பிரச்னை உடையவர்கள் என மொத்தம் 27 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.