கொரோனா தடுப்பூசி, அர்னாப்பிடம் ராணுவ ரகசியம்- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் ஹெவி அட்டாக்
டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரம், ராணுவ ரகசியங்களை அறிந்த அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து மத்திய அரசு மீது முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் இன்று காலை முதல் ட்விட்டரில் தொடர்ச்சியாக விமர்சித்துள்ளார்.
ப. சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு:
நிதி ஆயோக் குழு:
விவசாயம் தொடர்பான மாநில முதல்வர்களின் நிதி ஆயோக் குழு 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிக்கையை கொடுத்தது. இந்த அறிக்கை 16 மாதங்களாகியும் இன்னமும் நிதி ஆயோக் நிர்வாக குழுவிடம் கொடுக்கப்படவில்லை. இது பற்றி யாருக்கும் எதுவுமே ஏன் தெரியாமலேயே இருக்கிறது.?
இந்த குழுவின் அறிக்கை தொடர்பாக சமூக செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியும் அதை நிதி ஆயோக் நிராகரித்திருக்கிறது. இந்த தேடலில் ஈடுபட்ட அஞ்சலி பரத்வாஜ் பாராட்டுக்குரியவர்.
அர்னாப் கோஸ்வாமி விவகாரம்:
ஒரு பத்திரிகையாளரும் அவரது நண்பரும் பாலகோட் தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்னரே தெரிந்திருக்க முடியுமா?
ஆம் எனில் இந்த தகவலை கொடுத்த சோர்ஸ் மற்றவர்களுக்கும் அதாவது பாகிஸ்தான் உளவாளிகள் உள்ளிட்டவர்களுக்கும் பகிர்ந்திருக்கமாட்டார்களா?
இப்படியான ஒரு பத்திரிகையாளரை அரசு எப்படி ஆதரிக்கிறது?
கொரோனா தடுப்பூசி:
கடந்த ஆண்டு மார்ச் 24-ந் தேதி லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த லாக்டவுனை 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரத யுத்தத்துடன் ஒப்பிட்டு 21 நாட்களில் வெல்வோம் என்றும் பிரதமர் மோடி கூறினார். அப்போது அறிவியல் மீதோ கொரோனா தடுப்பூசி மீதோ பிரதமர் மோடிக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இருந்தது இல்லை.
கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள்தான் வென்றுள்ளன.. அரசாங்கமோ, நம்பிக்கைகளோ வெற்றி பெறவில்லை.
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்குத்தான் முழு பெருமையும் சென்றடையும். நமது விஞ்ஞானிகளுக்கு சல்யூட்!
இவ்வாறு ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.